கோவையில் உள்ள மாமனார் வீடு உட்படலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

18 October 2021



கோவையில் உள்ள மாமனார் வீடு உட்பட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

கடந்த ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை,புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தைக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிலும் இன்று காலை 6 மணி முதல் பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக வீட்டுக்கு வெளியே போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும்போது இந்த வீட்டில் தங்குவது வழக்கம், அதன் அடிப்படையிலே தற்போது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையானது நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.