ஒருநாளைக்கு எவ்வளவு க்ரீன் டீ குடிப்பது சிறந்தது என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர்

16 October 2021

ஒருநாளைக்கு எவ்வளவு க்ரீன் டீ குடிப்பது சிறந்தது என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். 

தினமும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் குடிப்பதை தற்போது பெரும்பாலானோர் வழக்கமாக்கி வருகின்றனர். குறிப்பாக புத்துணர்ச்சி மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் பெரிதும் நாடுவது க்ரீன் டீயைத்தான். க்ரீன் டீ பல்வேறு உடல்நலப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது. சிலர் தினமும் ஒரு கப் க்ரீன் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலும், சிலர் ஒரு நாளைக்கு 5 மற்றும் அதற்கும் அதிகமாக க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவும் உடல்நல பிரச்னைகளை உருவாக்கலாம். எனவே ஒரு நாளைக்கு எந்த அளவிற்கு குடிக்கவேண்டும் எப்படி குடிக்கவேண்டும் என்பதை தெரிந்திருத்தல் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

எவ்வளவு குடிக்கவேண்டும்?

க்ரீன் டீயில் ஆண்டி ஆக்சிடண்டுகள், பாலிபினால் மற்றும் கஃபைன் போன்றவை நிறைந்துள்ளன. ஒருநாளில் மூன்று கப்பிற்கும் அதிகமாக க்ரீன் டீ குடித்தால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும். க்ரீன் டீக்கு இயற்கையாகவே டயூரிக், அதாவது சிறுநீர் பிரிக்கும் தன்மை இருப்பதால் உடலிலுள்ள நச்சுக்களை பிரித்து வெளியேற்றிவிடும். எனவே அளவுக்கதிகமாக குடிக்கும்போது சரியாக தூங்கமுடியாமல் அவதிப்பட நேரிடும். மேலும் க்ரீன் டீயை பகல்நேரத்தில் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது

அதேபோல் உணவுக்கு 2 மணிநேரத்திற்கு முன்போ அல்லது 2 மணிநேரத்திற்கு பின்போதான் க்ரீன் டீ குடிக்கவேண்டும். உணவுக்கு இடையில் குடித்தால் உணவின் ஊட்டச்சத்துகள் உடலில் சேர்வது தடுக்கப்படும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு கப் க்ரீன் டீ சேர்த்துக்கொள்வது சிறந்தது. ஏற்கெனவே வயிற்றெரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.க்ரீன் டீயின் நன்மைகள்
நுரையீரல் புற்றுநோய், வயிறு, உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் பிரச்னைகள், சிறுநீரகம், கணையம் மற்றும் மார்பக பிரச்னைகளை தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். வயதான தோற்றத்தை குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. மூளை செயல்பாட்டை அதிகரிப்பதுடன், டயாபட்டிக் 2 நோயையும் தடுக்கும்.