ஆறு மாவட்டங்களுக்கான பயிர்கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

09 June 2021


மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல்,ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக விதைகளுக்கு பயிர் கடன் வழங்குதல்,உர வினியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மேலும் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன்,கம்பம் ராமகிருஷ்ணன்,தமிழரசி,கோ.தளபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ்சேகர் , துணை ஆட்சியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

 
விவசாய கடன் தள்ளுபடிகளில் முறைகேடு தொடர்பாக விசாரணை; தவறு உறுதியானால் நடவடிக்கை : கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
______
கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர், தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவை மக்களுக்கு தடையின்றி, விரைவாக சென்று சேர்வதற்கு தேவையான ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி :

விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க 11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க ஆணை இடப்பட்டு உள்ளது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

2.10 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.

கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.