சீனாவில் பரவும் புதிய வகை பறவை காய்ச்சல்: பரவும் அபாயம்?

02 June 2021

சீனாவில் இருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
சீனாவை சேர்ந்த 41 வயது நபர் ஒருவருக்கு H10N3 என்ற பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் அவருக்கு இந்த பறவை காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

 கடந்த சில நாட்களாக அந்த நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு சோதனை செய்ததில் H10N3 என்ற பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாகவும் இருப்பினும் இந்த வகை பறவை காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

ஆனால் இதே போல் தான் கொரோனா வைரஸை முதலில் சீனா கூறியது என்றும் ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவி விட்டது என்றும் எனவே இந்த பறவை காய்ச்சல் பரவாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.