ரூ.90 ஆயிரம் பணம், தங்க நாணயம் பறிமுதல்

05 April 2021

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திருநல்லாறு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தங்க நாணையம் , பணம் ஆகியவற்றை பாஜகவினர் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பெயரில் சூரக்குடி சாலையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், தாங்கள் வைத்திருந்த பையை சாலையில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். பின்னர் அந்த பையை சோதனை செய்தபோது 90 ஆயிரம் ரூபாய் பணம், 140 கிராம் தங்க நாணயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பணம் மற்றும் தங்கநாணயத்தை கைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் நாளை (6-ம் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.