தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகள்

உலக நாகரிகம் மிளிர்ந்த நாடுகளில் மக்களின்  பொழுது போக்கிற்காக பல்வேறு கலைகளும் விளையாட்டுகளும் தோன்றின. மனிதன் தோன்றிய காலத்தில் அச்சம் தரும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேட்டையாடுதலை வழக்கமாக கொண்டிருந்தான். பின்னர் வேட்டையாடுதலே ஒரு பொழுது போக்கு அம்சமாக மிளிர்ந்தது. எகிப்தின் நகரங்களில் அச்சம் தரும் விலங்குகளை அடக்கும் பொழுது போக்கு விளையாட்டுகள் தொன்றுதொட்டு நடந்துள்ளன. உலக அளவில் பொழுது போக்கு விளையாட்டுகளும் திருவிழாக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக விளங்கின. கிரேக்க நாகரிகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியா நகரில் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இன்றைய ஒலிம்பிக் விளையாட்டின் முன்னோடியாக இவ்விளையாட்டுகள் விளங்கின.

இந்தியா பரந்துபட்ட நாகரிகத்தையும் தொன்மை பண்பாட்டையும் கொண்ட நாடாகும். குறிப்பாக சமயத்துடன் தொடர்புடைய பல விழாக்களை இந்தியர்கள் கொண்டாடினர். இக்கால கட்டத்தில் பல விளையாட்டுகளும் நடைபெற்றன.  பொருளாதாரத்தில் மிளிர்ந்த பல நாடுகளில் கலைகள் வளம் பெற்றன. பல கலைகளுக்கு அரசு ஆதரவு வழங்கியது மட்டுமல்லாமல் மக்களுக்கான விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தியது. ஒரு நாடு வளம் பெற்ற நாடாக இருப்பின் அந்நாட்டு மக்கள்  பல்வேறு கலைகளுக்கும் விளையாட்டுகளுக்கும் சிறப்பிடம் அளித்தனர். மனித நடவடிக்கைகளில் மிக முக்கியமான பங்கை விளையாட்டுகளும் பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்துள்ளமையை வரலாற்றுச் சான்றுகள் பல எடுத்தியம்புகின்றன. இந்தியாவில் தொன்மையான பல விளையாட்டுகள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றுகின்ற விளையாட்டுகளாக விளங்குகின்றன.



தமிழர்கள்  பல  வீரவிளையாட்டுகளுக்கு களம் அமைத்தவர் ஆவர். சங்க இலக்கியங்களில் பெண்கள் விளையாட்டுகளும் ஆண்களுக்கான வீர விளையாட்டுகளும் குறிக்கப்பட்டுள்ளன. தமிழர் திருநாளான தைப்பொங்கல்  இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் உழவர்களுக்கான திருநாளாக தமிழர்கள் கொண்டாடுகின்ற வேளையில் அவர்களின் வளமைக்கு வளம் சேர்க்கின்ற கால்நடைகளுக்கும் விழா எடுப்பதுடன் அவற்றினைக் கொண்டு பொழுது போக்கு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தனர் அவ்வகையில் ஏறு தழுவுதல், கோழிச்சண்டை மற்போர், தெருக்களில் நடைபெறும் பல்வேறு உள்ளூர் விளையாட்டுகள் பொழுது போக்கு கலைகள் போன்றவைகளில் ஈடுபட்டனர்.  

 
இன்றைக்கு ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பெரிதும் பேசப்படுகின்ற விளையாட்டுகளின் ஒன்றாகும். இதனை சங்க இலக்கியங்களும் கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரமும் மிக விரிவாக எடுத்துக் கூறுகின்றன.



தமிழர்களின் வீரவிளையாட்டுகளில்  அவர்களால் பெரிதும் போற்றப்படும் எருதுபிடி விளையாட்டான ஜல்லிக்கட்டும் ஒன்று என்பது வரலாற்று உண்மை. விலங்கினங்களை துன்புறுத்துதல் கூடாது என்பது மனித நேய மாண்பாக இருந்தாலும்  எந்தவொரு விளையாட்டும் எவ்வித துன்பம் அல்லது உடல் வருத்தம் இல்லாத விளையாட்டு இல்லை என்றே சொல்ல வேண்டும். அண்மையில் கிரிக்கெட்டில் இறந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹக்ஸ்  உட்பட. இதனால் கிரிக்கெட் விளையாட்டையே தடை செய்ய வேண்டும் என எந்த அமைப்பும்  கோரிக்கை வைக்கவில்லை. உலக அரசுகளும் இதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை. ஏனேனில் இவை   மேல்தட்டு மக்களால் போற்றப்படும் விளையாட்டுகள்.  இந்தியப் பாரம்பரிய விளையாட்டுகளைப் போற்றினால் மட்டுமே நமது பண்பாட்டைக் காக்க முடியும் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும்.

பழங்கற்கால மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக தொடங்கி  நாளடைவில்  தனக்குப் பிடித்த விலங்குகளை வளர்க்கவும் முற்பட்டான். அவ்விலங்குகளுடன் விளையாட ஆரம்பித்து அதனை சமூக அமைப்பிலும் புகுத்திப் பொதுவிழாவாக  ஊர் தோறும்  ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாட ஆரம்பித்தான். வேளாண்மையுடன் தொடர்புடைய ஆவினமான பசுவும் எருதும் இதில் முக்கியப் பங்கை வகித்தன. மேலும்  வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனமான கோழிகளையும் விளையாட்டுகளில் புகுத்தினான்.  
தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக் கட்டு, எருதுபிடி சண்டை, ஏருதழுவுதல், மஞ்சி விரட்டு எனப் பலவாராக அழைக்கப்படும் பாரம்பரியமான விளையாட்டு 5000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. தமிழர் நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம் எனக் கருதப்படும் சிந்துவெளி முத்திரைகளில் இடம்பெற்றுள்ள  இவ்வீர விளையாட்டை  தமிழர்கள்  தங்களின் உழைப்பிற்கு உயர்வு அளிக்கின்ற  உழவர் திருநாளின் பொழுது தாங்கள் வளர்க்கும் மாட்டிற்கும் விழா எடுத்து  ஜல்லிக்கட்டை நிகழ்த்துகின்றனர்.

   

சிந்து வெளி அகழாய்வுகளில் பல விலங்கு உருவங்கள்  கிடைத்துள்ளன.  திமிழுடன் கூடிய எருது பெருமளவில் கிடைத்துள்ளது. இவற்றுள் இரண்டு முத்திரைகள்  சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ஏறு தழுவுதலை படம் பிடித்துக் காட்டுகின்றன. சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளில் வீரன் ஒருவன் நீண்ட வேல் போன்ற கழியைத் தன் வலக்கையில் தூக்கி அதன் பிடரியில் தாக்குகின்றான். இடக்கையில்  எருதின் கொம்பைப்  பிடித்தும்  தனது இடக்காலால் அதன் நெற்றிப்பொட்டில் உதைத்து எருதை அடக்குகின்ற காட்சி  இன்றும் தமிழ் வீரன் ஜல்லிக்கட்டை அடக்குகின்ற காட்சியைத் தத்ரூபமாக நமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 

அம்முத்திரையில்   தமிழர்களின் தெய்வமான பசுபதி எனப்படும் சிவனும் அமர்ந்துள்ளார். சில ஆய்வாளர்கள்  இந்நிகழ்வை எருதை பலியிடுவதாகக் கருதுவர். அது தவறு. காளையை பலி இடுவதாக இருந்தால் அடக்கும் வீரனின் கால் எருதின் நெற்றிப்பொட்டில் இருக்காது. மேலும் இடக்கையும் எருதின் கொம்பை பிடித்து இருக்காது. பசுபதிக்கு பலியிட்டால் பயபக்தியுடன் தான் இச்சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும். எனவே  பொது விழாவின் பொழுது தங்களுக்குப் பிடித்த இறைவனை இறுத்தி காளையை வீரன் அடக்குகின்றதை இம்முத்திரைச் சிற்பம் அழகுபட எடுத்தியம்புகிறது. 
மற்றொரு முத்திரைச் சிற்பத்தில் காளையை அடக்கும்  வீரர்களைப் பந்தாடும் காட்சி இன்றைய தமிழர்கள்  ஜல்லிக்கட்டின் பொழுது நிகழ்த்தப்படும் ஜல்லிக்கட்டு சாகச நிகழ்ச்சியை நம் முன்னோர் அன்றே நடத்தியுள்ளமையை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆறு வீரர்கள் திமிழுடன் கூடிய காளையை ஒருங்கிணைந்து அடக்க முயல்கின்றனர். அதில் ஒருவர் காளையின் திமிழ் மீது ஏறி அமர்ந்து அடக்க முயல்கின்றார். காளையினை எவ்வாறேனும் அடக்க வீரர்கள் முயற்சி செய்கின்றனர். காளையின் முன் பாய்ந்தவர்கள் எல்லோரையும்  அம்முரட்டுக் காளை தூக்கி எறிகிறது.  ஒருவர் காளையின்  காலடியில் விழுகின்றார்.  எருது தனது பலம் முழுவதையும் காட்டி  வீரர்களைப் பந்தாடி தூக்கி எறிகிறது. வீரர்கள் எருதின் பின் பக்கமும் மேலே சென்று கீழே விழுகின்றனர்.  அனைவருமே எருதை அடக்க இயலாமல் மண்ணைக் கவ்வுகின்றனர். இந்த படக்காட்சியை  விட வேறு என்ன வேண்டும்  நமது பாரம்பரிய  மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டை எடுத்தியம்ப. இன்றைய அலங்கா நல்லூரை 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறிய முத்திரையில் மிக அழகாக தமிழன் படம் பிடித்துக் காட்டியுள்ளான். 

இச்செயலை 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகை முல்லைக்கலிப்பாடலில் புலவர் அழகுபட குறித்துள்ளார். கால்நடை மேய்க்கும் இனத்தின் ஆயர்குல இளைஞர்கள்  தாம் விரும்பும் கன்னியரைப் பெறுவதற்காக  எருதுகளை அடக்கி தமது வீரத்தை வெளிப்படுத்துவர். இது ஏறு தழுவுதல் எனப்படும். 
’சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபுடன் ஒருங்கு’
 நன்கு கொம்பு சீவப்பட்ட எருதுகள் உள்ள தொழுவத்தில் நுழைந்து இளைஞர்கள் அவ்வெருதுகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தி தாங்கள் விரும்பும் பெண்ணை அடைய முற்படுவர். அவ்வாறு ஏறு தழுவும் பொழுது புழுதி பறக்கின்றது. ஒரு இளைஞன் அஞ்சாமல் கருஞ்சிவப்பு நிறமுடைய எருதின்  மேல் பாய்ந்து    அதன் பிடரியைப் பற்றுகின்றான்.
 ’ கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை 
விடாஅது நீ கொள்குவை’ என கலித்தொகையின் முல்லைக்கலியின் பாடல் வரி சிந்துவெளியில் கிடைத்துள்ள இரண்டாவது முத்திரையை நம் நினைவில் நிறுத்துகின்றது அல்லவா.   தமிழ் இளைஞர்களின் வீரத்தை பரன் அமைத்து ஊர் மக்கள் கூடி வேடிக்கைப் பார்ப்பதுடன் அவர் ஜெய்ப்பார் இந்த காளை வெற்றிபெறும்  அந்த காளையை அவர் அடுக்குவார் என பல விவாதங்களைச் செய்து மகிழ்ச்சி பொங்க  கண்டுகளிப்பதை கலித்தொகை குறிப்பிடுகிறது.  பலர் இதற்காக பந்தயம் வைப்பதையும் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் அல்லது எருது விளையாட்டு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு நடுகல்லில் எருது விளையாட்டில் எருதை அடக்கி இறந்த வீரனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாகும். இறந்த வீரனின் குடும்பத்திற்கு தக்க உதவிகள் செய்தும் அவருக்காக நடுகல் எடுப்பித்தும் ஊரார்  சிறப்பு செய்கின்றனர். இதே போன்று சேலம் மாவட்ட்த்தில் ஆறகளூர் அருகில் எருதை அடக்கின்ற காட்சி கொண்ட நடுகல் ஒன்றும் காணப்படுகிறது. இந்நடுகல்லில் பெண்களும் காணப்படுகின்றனர். இது சங்க இலக்கியங்கள் சுட்டும் ஏறு தழுவுதலை நமக்கு நினைவு படுத்துகிறது. 
 இதே போன்று வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை வைத்தும் தமிழகத்தில் தொன்று தொட்டு பொழுது போக்கு விளையாட்டுகள் நடைபெற்றன.   கோழிச் சண்டை விளையாட்டு தமிழர்கள் தங்களின் மற்றொரு முக்கிய விளையாட்டாகக விளையாட்டாகக் கருதப்பட்டது.  கி.பி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோழிக்கான நடுகற்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம் ஊருக்கு தென்கிழக்கில் உள்ள ஊர்  இந்தளூர். இவ்வூரின் சாலைப்பகுதியில் கோழி உருவம் பொறித்த நடுகல் ஒன்று உள்ளது. இக்கல்லில்  
‘கீழ்ச்சேரிகோழி பொடுகொத்த ’  என்ற  தொன்மைத் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
 இதே போன்று செஞ்சி விழுப்புரம் சாலையில் அரசலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில்  கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த  கோழி உருவம் பொறித்த நடுகல் உள்ளது. இந்நடுகல்லில்
 ’மேற்சேரிடுயாடி கருகிய கோழி’ 
என்று கல்வெட்டு தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.  கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவ்விரண்டு நடுகற்கலும் அக்காலத்தில் தமிழர்கள்  கோழிகளைப் பழக்கி கோழிச்சண்டைகளை பொழுது போக்காக நடத்துவர். அதில் வீரமாக மற்றொரு கோழியுடன் கோழிச்சண்டை நடத்தி இறக்கின்ற கோழிக்கு நடுகல் எடுத்து தமிழர் வழிபடுவர். அதற்காக எடுக்கப்பட்ட நடுகற்களே மேலே குறிக்கப்பட்ட இரண்டு நடுகற்கலும் ஆகும். 
கோழிச் சண்டையைப் பொழுது போக்கு விளையாட்டாக விளையாடியமையைப் ’புறப்பொருள் வெண்பாமாலை’ என்னும் தமிழ் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. இதில் கீழைச்சேரிக் கோழிக்கும் மேலைச்சேரிக் கோழிக்கும் நடத்தப்பட்ட கோழிச்சண்டை விளையாட்டு குறித்து கூறப்பட்டுள்ளது. சோழர்களின் தலைநகரமாக உறையூர் அக்காலத்தில் கோழியூர் என்றே குறிக்கப்பட்டது. கோழி ஒன்று யானையை அடக்கியதாக சான்றுகள் குறிக்கின்றன. அன்மையில் நடிகர் தனுசு நடித்த ஆடுகளம் என்ற  படம் ஒன்று கோழிச் சண்டையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இக்காட்சி தமிழர்கள் தொன்று தொட்டு கோழிகளை வைத்து பொழுது போக்கு விளையாட்டுகளை நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதற்காக நடுகல் எடுக்கின்ற வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 வேட்டையாடுதலும் அக்காலத்தில் பொழுது போக்கு விளையாட்டாக கருதப்பட்ட்து. பல கல்வெட்டுகளில் வேட்டையாடச் செல்லும் பொழுது அம்பு தவறுதலாக மனிதர் மீது பட்டு இறந்தமைக்காக அவர்களுக்கு அரசு தண்டனை வழங்கிய செய்திகள் காணப்படுகின்றன.  இராஜராஜன் காலத்தில் பல வீர விளையாட்டுகளும் நாடகங்களும் நடைபெற்றன. பல கோயில்களில் நாடக சாலைகள் இருந்துள்ளன. அதேபோன்று வீர விளையாட்டுகள் நடைபெறும் களங்களும் இருந்துள்ளன. தஞ்சாவூருக்கு வடக்கில் கருந்தட்டான்குடியில் இராஜராஜனின் படைக்களத்தில் இருந்த வீர்ர்களுக்கான மற்போர் விளையாட்டை இராஜராஜன் கண்டுகளிக்கின்றான். இவ்விளையாட்டுப்போரில் மற்றொரு வீரன் இறந்து விடுகின்றான். இறந்தவர் குடும்பத்திற்கு அரசு உதவித்தொகை வழங்கியதாக கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் பல விளையாட்டுக் கருவிகள் கிடைத்துள்ளன. குறிப்பாக தாயக் கட்டைகளும்  சதுரங்க காய்களும்  பெருமளவில் கிடைத்துள்ளன. மதுரைக்கு அருகில் கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் களிமண்ணாலும் தந்தத்தாலும் ஆன தாயக் கட்டைகளும்  சதுரங்க காய்களும் பெருமளவில் கிடைத்துள்ளன. 

தமிழகத்தின் இடைக்காலத்தைச் சார்ந்த பல கோயில்களில் வீர விளையாட்டுகள் குறித்த சிற்பங்கள் பல உள்ளன. கும்பகோனம் அருகில் உள்ள தாராசுரம் கோயிலில் கழைக்கூத்தாடி ஒருவர் ஒரு கையில் மூன்று பந்துகளைப் போட்டுப் பிடித்த நிலையில் இரண்டு கத்திகளை மேலே தூக்கி எறிந்து தன் மூக்கின் முனயில் பிடிப்பதும் மற்றொரு கத்தியை தன் கையில் வைத்திருக்கும் பந்தின் மேல் நிற்கச் செய்வதுமான காட்சி புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர வாள் விளையாட்டு, சிலம்பம், கோலாட்டாம் கரக ஆட்டம் போன்ற சிற்பங்களும் தமிழகம் பொழுது போக்கு விளையாட்டுகளில் முன்னோடி மாநிலமாக விளங்கி வந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே தமிழர்களின் பாரம்பரிய  வீர விளையாட்டுகளான  ஜல்லிக்கட்டையும் கோழிச் சண்டையும் பிற விளையாட்டுகளும்  நமது முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள  அரிய பெரும் பொழுது போக்கு விளையாட்டுகளாகும். இன்றைய மேலை நாட்டு விளையாட்டுகளை விட எவ்விதத்திலும் பெரிய அளவில் ஊறு விளைவிக்காத விளையாட்டுகள்  இவற்றையெல்லாம் பாதுகாத்துப் போற்றுவது நமது கடமையும் ஆகும்.

 சு. இராசவேலு
 வருகைப் பேராசிரியர்
 வரலாற்றுத்துறை
 அழகப்பா பல்கலைக்கழகம்
 காரைக்குடி