வரலாற்றில் யானைமலை!

வரலாற்றில்  யானைமலை
       
          யானைமலை மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை நரசிங்கமங்கலம் பகுதியில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
        
அமைப்பும், பெயர் காரணமும்:
           யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது. யானை மலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.

மலையின் வரலாறு:
   சமணர் கல்படுக்கைகள்
         யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் " இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. "இவ" என்பது "இபம்" என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் "யானை" என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் யானைமலை என்று பொருள். பா' என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள் படும். "ஏரிஆரிதன்", "அத்துவாயி அரட்டக்காயிபன்" ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும். யானைமலையில் சமணர்கள் இருந்ததை திருஞானசம்பந்தர் தன்னுடைய பதிகத்தில் பாடியிருக்கிறார். அக்காலத்தில் சமணர்கள் மதுரையில் சிறப்போடு இருந்துள்ளனர். பக்தி இயக்கத்தின் எழுச்சி சமணத்தை வலுவிழக்கச்செய்தது.

குடைவரை கோயில்கள்:

நரசிங்கபெருமாள் குடைவரை கோவில்:
          கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.

இலாடன் கோயில்: 
          முருகன் குடைவரை கோவில்
யானைமலையில் முருகன் பெருமானுக்கு லாடன் கோயில் எனும் குடைவரை கோவில் உள்ளது.   இங்கு காணப்படும் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இக்கல்வெட்டில் ""நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்"" என்பவர் வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்த இவர் இக்குடைவரை கோயிலை புதுப்பித்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது.

சமணச் சிற்பம்:
           ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம்’ என்று தீர்த்தங்கரர் சிலைகளை காவல்கோட்டம் வர்ணிக்கிறது. அற்புதமான வரிகள். யானைமலையிலுள்ள சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகளுக்கும் இந்த வரி அழகாய் பொருந்தும். யானைமலை எண்பெருங்குன்றங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகிலுள்ள பெருங்குன்றங்களிலும் ஒன்று.நரசிங்கம் பெருமாள்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தோரணவாயிலைத்தாண்டி செல்லும் போது வலதுபக்கத்தில் சிறுகுன்றின் மீது சமணச்சிற்பங்களை இயற்கையாக அமைந்த குகைத்தளத்தின் முகப்பில் அமைத்துள்ளனர். அங்கு செல்வதற்கு படிகள் உள்ளன.

         நரசிங்கப் பெருமாள் கோயில் செல்லும் வழியிலுள்ள இந்த குகைத்தளத்தில் உள்ள சமணச்சிற்பங்கள் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. குகைமுகப்பில் பல சிற்பங்கள் உள்ளன. தீர்த்தங்கரர் சிற்பங்கள், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகாயட்சி, மாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.  இங்குள்ள சிற்பங்களில் மிக அழகாக வண்ணம் பூசி சித்திரங்களைத் தீட்டியுள்ளனர். இதே போன்று சித்தன்னவாசலிலும் அழகாக சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக்கதைகளை விளக்குகின்றன. பார்சுவநாதரின் சிலையைப் பார்க்கும் போது அவருக்கு மேலே தர்ணேந்திரன் என்பவன் ஐந்துதலைப்பாம்பாக மாறி குடைபிடித்துக்கொண்டிருக்கிறான். தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப்பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது. கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத்தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது. கமடன் பின் பணிந்து பார்சுவநாதரை வணங்குவது போலவும் அதே சிலையின் அடியில் வடித்துள்ளனர்.

     பார்சுவநாதருக்கு அருகில் பாகுபலி சிலை காணப்படுகிறது. பாகுபலி ஆதிநாதரின் மகன். ஆதிநாதர் தீர்த்தங்கரர்களுள் ஒருவர். பாகுபலிக்கு இருபுறமும் நிற்பவர்கள் பிராமி மற்றும் சுந்தரி. இருவரும் பாகுபலியின் சகோதரிகள். பிராமியின் பெயரில்தான் கல்வெட்டுக்களுக்கு பிராமி எனப் பெயர் வந்தது.

        மகாவீரரின் சிற்பத்தின் மீது வண்ணம் பூசி இருபுறமும் விளக்குகள் மற்றும் சாமரம் வீசுவோரின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்திரங்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் அழியாமல் உள்ளது. அதன் அருகில் அம்பிகா இயக்கியின் சிற்பம் காணப்படுகிறது. அம்பிகா இயக்கியின் கதையும், காரைக்கால் அம்மையாரின் கதையும் ஒன்று போலவே சொல்லப்படுகிறது. இறைபக்தி அதிகம் கொண்ட பெண்கள். கணவன் கொடுத்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை இறையடியாருக்கு கொடுத்துப் பின் கணவன் கேட்டதும் ஒன்றை தன் பக்தியின் வலிமையால் கொடுத்ததை கணவன் உணர்ந்து அவளை வணங்குவது. இந்தக் கதைகள் சைவசமயத்திலும், சமணசமயத்திலும் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.

    இங்குள்ள சிலைகளை அச்சணந்தி என்ற அடியார் செய்ததாக குறிப்புள்ளது. இங்குள்ள வட்டெழுத்துக்கல்வெட்டுக்களில் ஒன்று இச்சிலைகளை பாதுகாக்கும் பொறுப்பை நரசிங்கத்து சபையாரிடம் விட்டிருந்ததை குறிப்பிடுகிறது. அந்தக் காலத்தில் சபையாராகயிருந்த பிராமணர்களே இதை பாதுகாக்க முன்வந்திருக்கிறார்கள். யானைமலை சமயநல்லிணக்க மலையாக இருந்து வருகிறது.

இலக்கியத்தில் யானைமலை:
           பல்வேறு கல்வெட்டுக்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு இருப்பதனை மேலே கண்டோம். கல்வெட்டுக்கள் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

          தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும். 

சங்க இலக்கியங்களில் யானைமலை:
        
         சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

          சங்கப் பாடல்கள் யானைமலையைக் குறிப்பிடும்போது, பிடி மடிந்தன்ன குறும்பொறை, பிடி மடிந்தன்ன கல், பிடி துஞ்சு அன்ன அறை ஆகிய சொற்றொடர்களால் உணர்த்துகின்றன. ஒரு பெண்யானையானது படுத்து உறங்குவதைப் போலத் தோன்றும் மலை என்பதே இச் சொற்றொடர்களின் பொருளாகும். இனி, இப்பாடல்கள் கூறும் செய்திகளை விளக்கத்துடன் காணலாம்.

அகநானூற்றுப் பாடல்கள்:
          மதுரை மருதன் இளநாகனார் இயற்றிய அகப்பாடல் 269 ல் யானைமலை பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

          யானைமலைப் பகுதியானது சங்ககாலத்தில் முல்லைநிலமாக விளங்கியது. இப் பகுதியில் முல்லைநில மக்களாகிய ஆயர் / கோவலர் வாழ்ந்தனர். ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு ஏதுவாக யானைமலையைச் சுற்றிலும் பரந்த பசும் புல்வெளி இருந்திருக்க வேண்டும் அல்லவா?. இப்படிப்பட்ட பரந்த பசும் புல்வெளிகளை இன்றும் கூட யானைமலையைச் சுற்றிலும் காணலாம். 

       ஆயர்களின் ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்து செல்வதும் ஆயர்கள் கள்வருடன் போர்செய்து அவற்றை மீட்டு வருவதும் சங்ககாலத் தமிழரின் நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறை ஒன்றினைத் தான் இப்பாடல் விரிவாகக் கூறுகிறது. தங்களது ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்துசெல்ல, அவற்றை மீட்பதற்காகத் தலையில் சிவந்த கரந்தைப் பூமாலையினையும் கால்களில் கழல்களையும் அணிந்து கையில் கூரிய வேல் தாங்கி வீரர்கள் தயாராயினர். கரந்தைப் போருக்குக் கிளம்பும் முன்னர், வீரமரணம் எய்திய முன்னோர்களின் நடுகல்லை வழிபட்டனர். இந்த நடுகல்லானது செயற்கையாக நடப்படாமல் நட்டதைப்போலவே இயற்கையாக அகலமாகவும் உயரமாகவும் விளங்கியதொரு கல்லாகும். இதற்கு முன்னால் கரந்தைப் போருக்குச் சென்று வீரமரணம் எய்திய முன்னோர்கள் அனைவரின் பெயரும் இக் கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. இக் கல்லானது படுத்திருக்கும் யானையைப் போலவே தோன்றுகின்ற யானைமலையை ஒட்டியே அமைந்திருந்தது. முன்னோர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அக்கல்லினை நீரால் கழுவி ஈரமஞ்சளைப் பூசி வழிபட்டனர். இச் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் …… அகம். 269

          மேற்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மலையானது மதுரையில் இருக்கும் யானைமலை தானா இல்லை வேறு ஏதாவதொரு மலையா என்ற ஐயப்பாட்டினை இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் ஊர் ஆகிய மதுரை என்ற பெயர் தெளிவாக்கி விடுகிறது.

          அடுத்ததாக, பரணர் இயற்றிய அகப்பாடல் எண் 178 ஐக் காணலாம். யானைமலையின் அருகில் நீர் ஊறுகின்ற மிகப்பெரிய சுனை ஒன்று இருந்தது. யானைமலையில் பெய்யும் மழைநீரெல்லாம் கீழே இறங்கி கடலில் பல ஆறுகள் கலப்பதைப் போல இந்த சுனையில் ஒன்று சேர்ந்தன. வயிரம் போல ஒளிர்ந்த கூரிய பற்களையும் மூங்கில் வேர்போன்ற மயிரினையும் கொண்ட காட்டுப்பன்றி ஒன்று சேப்பங் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்டபின்னர் அருகிலிருந்த சுனைநீரைப் பருகியது. பின்னர், அடர்ந்து வளர்ந்திருந்த செடிகொடிகளுக்கு இடையில் காட்டுப்பன்றி புகுந்து சென்றபோது வெண் கூதாள மலர்களின்மேல் அதன் உடல் உரசவும், அம்மலர்களிலிருந்து பொன்னிறத் தாதுக்கள் பன்றியின் உடல்மேல் உதிர்ந்தன. அந்நிலையில் அப்பன்றியைப் பார்ப்பதற்குப் பொன் துகள்கள் ஒட்டியிருக்கும் கட்டளைக் கல்லைப் போலத் தோன்றியதாகப் புலவர் பாடுகிறார்.

         இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பிடி மடிந்தன்ன கல்” என்பது யானைமலையினையும் "ஊறுநீர்ப் படார்” என்பது நீர்ச் சுனையினையும் குறிப்பதாகும். இச் சுனையினை யானைமலையின் கீழே இன்றும் காணலாம். யானைமலையின் கீழே இருக்கும் இச்சுனையானது ஏனைய குளம் குட்டைகளைப் போன்றதல்ல. இது நீர் ஊறும் பள்ளமாக விளங்கியதால் தான் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் வற்றிப் போகாமல் உள்ளது. இச் சுனையானது அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேற்காணும் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
….. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர ….. - அகம். 178

கலித்தொகைப் பாடல்:
          கலித்தொகையின் 108 ஆம் பாடலிலும் யானைமலை பற்றிய செய்திகள் உள்ளன. யானைமலையானது முல்லைநில மக்கள் ஆகிய ஆயர் / கோவலர் வாழ்ந்த பகுதியாக விளங்கியது என்று முன்னர் கண்டோம். கலித்தொகையின் 108 ஆவது பாடலும் முல்லைநில மக்களைப் பற்றியே கூறுகின்றது.

          பெண்யானை ஒன்று படுத்திருப்பதனைப் போலவே தோன்றும் யானைமலையைச் சுற்றிலும் இயற்கையானது செழிப்புடன் விளங்கியதைக் கலித்தொகைப் பாடலின் மூலம் அறிய முடிகிறது. மாடுகளை மேய்த்துக்கொண்டு கோலுடன் செல்லும் ஆயன் மகன் ஒருவன் வழியில் ஒரு ஆயர்குலப் பெண்ணைக் கண்டு காதல் வயப்படுகிறான். அவளை விரும்புவதாகக் கூறி அவளது அழகைப் புகழ்கிறான். அவளோ அவனது காதலை ஏற்க மறுத்து வீடு செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டுக்கு விரைவதைத் தடுக்கும் ஆயனோ வெயில் அதிகமாக இருப்பதால் குளுமை மிக்க யானைமலைக்குச் செல்லலாம் என்றும் அங்கே சுனைநீரில் விளையாடியும் மலர்களைப் பறித்துச் சூடியும் சோலையில் தங்கிப் பொழுதைக் கழித்தும் மாலையில் வீடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை கூறுகிறான். மிக நீளமான அப்பாடலிலிருந்து குறிப்பிட்ட சில வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

…….. வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு ….. – கலி. 108

          மேற்காணும் பாடல் வரிகளிலிருந்து யானைமலையைப் பற்றிய சுவையான சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வெட்டப்பட்ட நுங்கின் கண்களைப் போலத் தோன்றும் சிறிய பல நீர்ச்சுனைகள் யானைமலையின் மேலே இருந்தன என்றும் தளவம், முல்லை, காயா போன்ற பலவித மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் யானைமலையைச் சூழ இருந்தன என்றும் ஆயர்கள் தமது வீடுகளில் வெண்ணெய் கடையும் ஓசையானது எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டே இருந்தது என்றும் இப்பாடலின் வரிகள் மூலம் தெரிய வருகிறது. யானைமலையின் மேல் இருந்த சுனைகளையே பின்னாளில் வந்த சமணர்கள் தமக்கான படுக்கைகளாகச் செதுக்கி மாற்றியிருக்கக் கூடும்.சங்க காலத்திலேயே யானைமலை விரிவாகப் பேசப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். யானைமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கரந்தைப் போர்கள் நடந்திருக்கும் என்பதால் போரில் மரணம் அடைந்தோரின் உடல்கள் அப்பகுதியில் தான் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும். யானைமலையைச் சுற்றிலும் அகழ்வாய்வு செய்வதன் மூலம் புதைந்துபோன அந்த நடுகல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சங்ககாலம் பற்றியும் தமிழரது தொன்மை பற்றியும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் பல தொல்பொருள் எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு இப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளானது இக் கட்டுரையின் மூலம் தமிழக அரசுக்குப் பணிவுடன் முன்வைக்கப் படுகிறது. 

                         அன்புடன்,                                    பாலமுருகன்,M.A, T.P.T, PGD.A.E, PGD.YOGA,PGDCA, D.E.M, C.G.T.
கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆர்வலர்.