களப்பிரர்-பல்லவர் போர்கள் (களப்பிரர் வரலாறு பகுதி 2)

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முனைகையில், அவர்களால் தாக்குண்ட இக் களப்பிரர் அருவா வடதலை நாட்டை விட்டுத் தொண்டை மண்டலத்திற்குள் நுழைந்தனர். இவர்கள் நுழைவால் சோழர் சிற்றரசு தொண்டை மண்டலத்தில் வீழ்ச்சியுற்றது. பல்லவர் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முனைந்த பொழுது, அவரிடம் போரிட்டுத் தோற்ற களப்பிரர் காஞ்சியை விட்டுப் பாலாற்றுக்குத் தெற்கே சென்று விட்டனர். அதனாற்றான் பப்பதேவன் காலத்தில் பாலாறு பல்லவர் நாட்டின் தென் எல்லையாக இருந்திருந்தால் வேண்டும். பிறகு சிவஸ்கந்தவர்மன் இக் களப்பிரரோடு போரிட்டுத் தென் பெண்ணையாறு வரை பல்லவ நாட்டை விரிவாக்கி இருத்தல் வேண்டும்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடைக்காலப் பல்லவருள் ஒருவனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் (களப்பிரர்) சேனையை நடுங்க வைத்தான் என்று ஒரு பட்டயம் கூறலால், தொண்டை-சோழநாடுகளில் இருந்த களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் போர் நடந்த செய்தி அறியலாம்.

இக் களப்பிரர் அடிக்கடி பல்லவரோடு போரிட்டு வந்திருக்க வேண்டும் இவர்களைக் காஞ்சியினின்றும் துரத்தித் தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்ற இடைக்காலப் பல்லவரும் இடருற்றவராதல் வேண்டும்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பல்லவப் பேரரசனாக இருந்த சிம்ம விஷ்ணு கி.பி. 575-615) களப்பிரரை முறியடித்த பெருவீரன் என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறுகின்றது. சிம்மவிஷ்ணுவின் பெயரனான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-660) இக் களப்பிரரோடு போரிட்டான். கி.பி.7ஆம் நூற்றாண்டின் கடையிலும் எட்டாம் நூற்றாண்டின் இடையிலும் சாளுக்கியர் இக் களப்பிரரைக் கண்டுள்ளனர். 



வடக்கே பல்லவராலும் தெற்கே பாண்டியராலும் அடிக்கடி தாக்குதல் பெற்று வலிகுன்றிய இக் களப்பிரர், கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைக்கு அருகிலும் கொடும்பாளுரிலும் முத்தரையர் என்னும் பெயருடன் சிற்றரசர்கள் ஆகிப் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்தனர்.

Reference book : பல்லவ வரலாறு