தலைவன்கோட்டை சரித்திரம் (பாகம் 1)

தலைவன்கோட்டை சரித்திரம்
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
 தென்பாண்டி மண்டலத்தின் ஆசீர் நாடான இன்றைய திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார்கோயிலுக்கு மேற்காக அமைந்துள்ள ஊரே தலைவன் கோட்டையாகும். சங்கரன்கோயிலிருந்து 14 கி.மீ தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு "தலைவனார்" பட்டங்கொண்ட கொண்டையன்கோட்டை மறக்குல மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்கள் பற்றிய செய்திகள் சொல்லும் தாருகாபுரம் செப்பேடானது, இந்த அரசின் தோற்றமும், தொடக்கமும், பணிரெண்டாம்நூற்றான்டின்ஆரம்பத்தில்  {1205-1206} என்கிறது. 




தாருகாபுரம் செப்பேடு விபரம் 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
     தென்காசிப்பாண்டியனான சீவலமாறனால் திருவண்ணாத தேவராகிய இந்திரத்தலைவனுக்கு இந்த செப்பேடு தரப்பட்டது. {திரு.வாணாத தேவர் என்பதே திருவண்ணாததேவராகும். வாணாதிராயர் மறத்திரு. வாணாதிராயர் என்றும் அழைக்கப்பட்டனர், இனி சேற்றூர் ஜமீன்தாருள்ளும் திருவணாததுரை எனக்குறிப்பிடப்பட்டோரும் உள்ளனரென்பதும் குறிப்பிடத்தக்கது } இந்த செப்பேட்டில் உள்ள செய்தியால் இவர் வீரிருப்பு எனும் ஊரிலுள்ள மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த வெள்ளையான கொம்புகளை உடைய பலம் வாய்ந்த ஒரு மிருகம் சந்திரன் எனும் பெயரோடு இருந்து வந்ததையும், அது அங்கே தன்னை அடக்க வந்த பல்வேறு மன்னர்களையும் கொன்று போட்டது என்றும், {அந்த மிருகம் காட்டுப்பன்றி அல்லது யானையாகவும் இருக்கலாம் } அதைக்கொல்வார் யாரும் இல்லாமல் இறுதியாக திருவண்ணாததேவராகிய இந்திரத்தலைவனால் அது வெட்டிக்கொல்லப்பட்டது என்றும், அவர் "கிழுவைநாடு" எனும் ராமநாதபுரம் சீர்மையிலுள்ள கீழக்கரைப்பகுதியாகிய கிழக்கு கடற்கரை பிரதேசத்திலிருந்து வந்தவர் என்றும், திருவணாததேவராகிய அவர் பாண்டியனால் இந்திரத்தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டார் என்றும், அவருக்கு ..




1.தண்டிகைப்பல்லக்கு - தண்டி பல்லக்கு      பொன்னாலான சிவிகையும்,

2. இரட்டை தீவட்டி- இரவில் செல்லும்போது ஒளிதரும் தீப்பந்தங்களும், 

3.இரட்டை குடை- மற்றும் மகரக்குடை -  இரட்டைக்குடைகளுடன்,மகர உருவம் பொறிக்கப்பட்ட குடை(- மகரம் ஒரு வகை நீர்வாழ் விலங்கு)

5.கரங்கு டாலு - கருடக்கொடி (குரங்கு கொடி - அனுமன் கொடி மற்றும் கருடன் பறக்கும் கொடி)

6. உபைய சாமரம் - (இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றையினால் செய்யப்பட்ட விசிறிகளும்,)

7.தவளச்சங்கு -  (மன்னர் வருகையின் போது ஒருவித விஷேச ஒலியெழுப்பும் சங்கு.)

8.நடனாடக சங்கீதம் - (கர்நாடக சங்கீதத்துடன் கூடிய நாட்டிய நாடகம்)

 - என மன்னர்க்குரிய அஷ்ட மங்களங்களாகிய இவ்விருதுகளையும் தந்து,

பாண்டியன் வழங்கிய அந்த வீரிருப்பு மலைக்காட்டுப்பகுதிக்கு நாகபுரம் -இந்திரபுரம், எனப் பெயர்சூட்டி,  தேங்காய் தொட்டுக்கொடுத்தபின் அங்கே அவனாலேயே ஒரு கோட்டையும் கட்டித்தரப்பட்டது என்றும் அதுவே தலைவன்கோட்டையாகும் என்றும் தாருகாபுரம் செப்பேடு தெரிவிக்கிறது. மேலும் தலைவன்கோட்டைக்கு அடங்கிய பகுதிகளாக இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களும் அதன் எல்லைகளும் வகுக்கப்பட்டது தெரிகிறது. அவைகள் கீழ்வருமாறு. .

1. வேட்டைக்காரன்பட்டி, 
2. திருவேட்டநல்லூர், 
3. பாண்டியக்கோனார் குளம், 
4. ராமலிங்க புரம், 
5. புன்னைக்குளம், 
6. புளியங்குடி, 
7. வாசுதேவநல்லூர்,
8. தாருகாபுரம், 
9. மலையடிக்குறிச்சி, 
10. பட்டக்குறிச்சி, 
11.அரியூர் ,
12. பரியூர் , ( இன்று பெரியூர் என வழக்கு)
13.புதூர் , ( இன்று வடக்குப்புதூர்-    தெற்குப்புதூர் என இரண்டு புதூர்களாக உள்ளது )
14.இருமன்குளம் ,
15.வீரிருப்பு ,
16.வேப்பங்குளம் ,
17. நயினார் குளம்,
18. இந்திரபுரம், 
19.நாகபுரம், 
20. வடமலைபுரம், (வடமலாபுரம்)
21.முள்ளிக்குளம், 



    - எனவும்,  இந்த சிற்றரசின் எல்லைகளாக சங்கரநயினார்கோயிலின் மேற்குரதவீதியின் நடுவிலிருந்து, அதன் மேற்கு சாலையிலிருந்து வடக்காகவும், கிழக்கில் கருமலை வரையிலும்,  வாசுதேவநல்லூர் கூனி ஆற்றின் தெற்குவரையிலும் வகுக்கப்பட்டிருந்தாக செப்பேடு குறிப்பிடுகிறது. 

மேலும் சிறப்புரிமைகளாக சங்கரநயினார்கோயிலில்  தீர்த்தம், திருநீறு, சந்தனம், திருமாலை, பாக்கு, வெற்றிலை, முதன்மையாக கொடுத்து, அதாவது முதல்மரியாதை கொடுக்கவேண்டும் என்றும், 

தேர் வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கும் முதலுரிமையையும், சீவலமாறபாண்டியனால் தரப்பட்டது எனவும் செப்பேடு குறிப்பிடுகிறது. {1910 வரையிலும் இந்த நடைமுறை இருந்துள்ளது }

இதற்கு சாட்சிகளாக பொக்கிஷம் சூரசங்கு நாயக்கனும்,  கடம்பூரை ஆண்ட மறக்குலத்து "தடியத் தலைவனும்" , வடகரை எனும் சொக்கம்பட்டி பாளையக்காரரான மறக்குலத்தினனாகிய "முடிபொறுத்த செம்புலித்தேவனும்" இருந்ததாக பட்டயம் சொல்கிறது. 

இந்த பட்டையத்தை எழுதியவனாக சங்கரநயினார்கோயிலில் இருந்த சங்கரலிங்கம்பிள்ளையின் மகனாகிய மீனாக்ஷிநாதன் குறிப்பிடப்படுகிறான்.

செப்பேட்டின் இறுதியில் உம்பளச்சறுவ மானியமாக தரப்பட்ட இந்த பூமிக்கு எந்த அரசராலும், குடியேற்றக்காரர்களாலும், எவ்வித ஊறுகளும், கேடுகளும் ஏற்படக்கூடாதென்றும், அப்படி செய்வோர்களுக்கு கங்கைக்கரையில் காராம்பசுவினைக்கொன்ற தோஷமும், பிராமணர்களை கொன்றதால் வருகிற தொஷமும் பீடிக்குமென்றும் சொல்லி முடிவடைகிறது. 
                                ~☆ ☆ ☆~
☆"தலைவனார்" எனும் பெயர் சிறப்புகள்☆
        
       தலைவனார் எனும் பெயரானது  ஈசனின்று வந்த பெயராக சான்றுகள் விளக்குகின்றன..

தலைவன் தானிணை சார்வோம்: 
:சூலம் தாங்கிய தேவர் தலைவர்.”,'
தலைவதின் தாள்நிழற் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய். தாழ்தடை இளமதி: தாங்கிய தலைவன்.', 'சிராப்பள்ளித் தலைவரை.’, கவிக்காழித் தலைவா.', 'அவன்எம் தலைமையனே.”, நாகேச்சர நகருள் தலைவா.", "சாய்க்காட்டெம் தலை வன். , அரக்கன்தோள் சாய்த்த தலைமகன். :, நோய் கள் தள்ளிப்போக அருளும் தலைவன்.', 'விடையூர்வார் தலைவர்.', 'தாயுறு தன்மையாய தலைவன்.' , ' வலஞ் சுழி இடமாக இருந்த நாயகன்.”, "அருள்செய்த தலைவ னர். நீள்சடையாய் தலைவா.', ' விடையானும் எங்கள் தலைவன்.”, 'தாதணி குழலும்தலைவர்., தாருடைக் கொன்றையந் தலைவர்.', 'தக்க்நல் வானவர் தலைவர்.', 'பிறைதாணலங்கல் உகந்த தலைவ னார்.','தண்ணலங்கள் உகந்த தலைவனார்.', போர் விடையன் தலைவன்.' தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.', 'தலைவனர் கோல்தன் மாலை சூடும் தலைவர்.', 'இமையோர்கள். தங்களை யாரிடர்திர நின்ற தலைவர்.”, மலையின் தலைவன்.' பூசு பொடித் தலைவர்.', 'அண்ட நாயகனே.', தாயினும் நல்ல தலைவர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "தலையாலே பலிதேரும் தலைவனை.”, 'தானவர் தலை வர் போலும்.”, தாழ்வராம் தலைவன் பாலே. கருவுள் நாயகன். யூத நாயகன்.', 'ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்,வேதநாயகன் வேதியர் நாயகன், பூத நாயகன்.', "தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை." சலங்கொள் சடை முடியுடைய தலைவா. தில்லை நடம்ப்யிலும் தலைவன்.', 'சாம்பர் மெய் பூசும் தலைவா', சங்கை தனைத் தடுத்தாண்ட தலைவன்.'; சமையமவை. ஆறினுக்கும் தலைவன்.”, தலைகலனாகப் பலியேற்ற தலைவன்.'- என்று திருநாவுக்கரசு நாயனாரும் பரம்பொருளாகிய ஈசனை விளிப்பதை அறியலாம். 

°பட்டம் சூட்டும் முறை °

. மன்னருக்கு ஒரு பிராமணர்தான் முடிசூட்டுவார். மன்னருக்கு   சில கட்டுப்பாடுகள் உண்டு . அவர் பிணங்களையோ  , குருடர்களையோ, காணக் கூடாது  என்பதும்  ஐதீகம். 

°ஜமீன் கோயில்கள்°

- தலைவன் கோட்டையில் அரண்மனை அமைத்து வாழந்த ஜமீன்தார்கள் பிற்காலத்தில் தாருகாபுரத்துக்கு தங்களது இருப்பிடத்தினை மாற்றினர். தாருகாபுரம் நாதகிரி மலை அடிவாரத்தில் உள்ளது. 

இந்த மலையைச் சுற்றி மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான மகாதேவர் ஆலயம், பாலசுப்பிரமணியர் ஆலயம், நாதகிரி முருகன்ஆலயம், நல்லபிள்ளைபெற்றாள் அம்மன் ஆலயம் உள்பட பல ஆலயங்கள் உள்ளன. தலைவன் கோட்டை சமஸ்தானத்துக்கு உள்பட்ட மத்தியஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம், இந்த மலையை சுற்றியே நடந்துள்ளது. தற்போது ஜமீன்தார் வாரிசாக ராஜராம சேவக பாண்டியன் வாசுதேவ நல்லூரில் வசித்து வருகிறார்.     
                 •  •  •  •  •  •  •  •  •  •  •  •  •  •  •



°பிற ஜமீன்களுடனான உறவுகள்!° 

தலைவன்கோட்டை -சேத்தூர். 

 தலைவன் கோட்டை ஜமீன்தாரும், சேத்தூர் ஜமீன்தாரும் நல்ல நட்போடு வாழ்ந்து வந்தனர். இருவருமே தெய்வங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர் வைகாசி விசாகம் அன்று தாருகாபுரம் மத்தியஸ்தர் கோயிலுக்கும், சேத்தூர் நச்சாடை தவிர்த்த ஈஸ்வரர் கோயிலுக்கும் ஒரேநாளில் திருவிழா நடத்தி கொண்டிருந்தார்கள். 

இந்த இரு திருவிழாவிலும் இரு ஜமீன் மக்களும் கலந்துகொள்ளவேண்டும். எனவே இரண்டு கோயில் திருவிழாக்களையும் வெவ்வேறு நாட்களில் மாற்றி வைத்தனர். அதோடு, தலைவன் கோட்டை கோயிலுக்கு சேத்தூர் ஜமீனும், சேத்தூர் ஜமீன்தார் கோயிலுக்கு  தலைவன் கோட்டை ஜமீன்தாரும் விருந்தினராகச் சென்று 10 நாட்கள் தங்கி சிவனை வணங்கும் வழக்கத்தினை உருவாக்கினர். 1790 வரையிலும் சேத்தூர் -தலைவன்கோட்டை பரஸ்பர திருமண உறவுகளை பேணியுள்ளதாக தற்போதைய சேத்தூர் ஜமீன்தார் திரு. எம். ஏ.திருவண்ணாததுரைராஜா தெரிவிக்கிறார்.

சிவகிரி  ஜமீனுடனான திருமண உறவுகள்! 

தொன்றுதொட்டு சிவகிரி வன்னியமறவரோடு மண உறவினைக்கொண்டவர்கள் தலைவனார்கள்.சிவகிரியின்  ஜெகநாதராஜா மணம்புரிந்தது தலைவனார் மகளாகிய திரு.கோமதிசிவப்பிரிய நாச்சியாரையே ஆகும். இவர்களின் புத்திரரே நமது சிவகிரி இளைய ஜமீன்  திரு. ஹரிஹர ராஜா அவர்கள். 

சிங்கம்பட்டி ஜமீனுடனும் இவர்களின் உறவுமுறைகளை அவர் மூலம் அறியமுடிகிறது. 

° பேய்த்துரை தலைவனார் °

1822 ஆண்டுவாக்கில் தலைவன்கோட்டை ஆட்சிப் பொறுப்பு இளவரசி மருது நாச்சியாரை வந்தடைந்தது. இவருக்கு இந்திரன் ராமசாமி தலைவன் என்ற மைனர் ராஜா பிறந்தார். இவருக்கு மட்டுமல்ல, இவருடைய தந்தையார், பாட்டனார், இவருக்குப் பிறந்த மகன் மற்றும் அவருடைய வாரிசு என்று எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் இந்திரன் ராமசாமி தலைவன் என்றுதான் பெயர்! மருது நாச்சியாருக்குப் பிறகு உரிய வயதில் இவர் ஜமீன் பொறுப்பை ஏற்றார். 
இவருடைய வம்சாவழியில் வந்த பேய்த்துரை என்றும் கிறுக்குதுரை என்றும் ‘பட்டப்பெயர்’ கொடுக்கப்பட்ட ஜமீன்தார் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்.  பின்னால் நடக்கப்போவதையெல்லாம் தனது ஞானதிருஷ்டியால் கண்டுபிடிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தாராம். ஒரு சமயம், ஊர் மக்கள் அனைவர் உழைப்பாலும் ஒரு தடுப்பணை கட்டினார். 

எதற்கு இந்த வேண்டாத வேலை என்று பலரும் மனசுக்குள் சலித்துக்கொண்டார்கள். ஆனால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. மழைநீர் ஆற்றோடு போய்விடாதபடி, தடுப்பணையால் தேங்கி நின்றது. இதனால் தலைவன்கோட்டை விவசாயத்தில் மேலோங்கியது. சுற்றுவட்டார கிராமங்கள் எல்லாம் செல்வசெழிப்பானது. அனைவரும் ஜமீன்தாரைப் போற்றிக்கொண்டாடினார்கள். இவர் அதிகாலையில் ராஜ உடையில் வெள்ளைக்குதிரை மீது ஏறி தினமும் கோயிலுக்கு  செல்வார். முதலில் தாருகாபுரத்திலுள்ள மத்தியஸ்தநாதர் கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கி விட்டு தலைவன் கோட்டையிலுள்ள திருவாய்மொழி அம்மன் கோயிலுக்குச் செல்வார். 

ஒருசமயம், வயது முதிர்ந்த அவருடைய கணக்கு பிள்ளை, "கோயிலுக்கு வரும்போதுகூட ராஜதோரணையைக் காட்டவேண்டுமா? சாதாரண உடையில் வரலாமே,”  என்று கூறினார். ஜமீன்தார் சிரித்துக்கொண்டே "இந்த ஜமீனும், ராஜ உடையும், கடவுள் அருளால் எனக்குக் கிடைத்தவை. அதை தினமும் அவரிடம் காட்ட வேண்டாமா? அப்போது தானே இறைவன்  சந்தோஷப்படுவார்?” என்று கேட்டார்! கணக்கு பிள்ளை வாயடைத்துப் போனார். ஆடம்பரமாக, டாம்பீகமாக உடையணிந்து கோயிலுக்குச் செல்வதில் இப்படியும் ஒரு காரணம் இருக்கமுடியும் என்று அவருக்கு அப்போதுதான் தெரிந்தது. 

ஜமீன் கிராமங்களுக்கு அடிக்கடி போய் வரும் இவர், வழியில் தென்படும் மக்களுக்கு ஏதேனும் கஷ்டம், தேவை என்றால், உடனே குதிரையை நிறுத்தி அவர்களுக்கு உதவுவார். மத்தியஸ்தநாதர் கோயிலின் நிரந்தர தர்மகர்த்தா இந்த ஜமீன்தார். மத்தியஸ்வரர் ஆலயம்  பஞ்சபூத தலங்களில் ஒன்று. இப்பகுதியில்  சங்கரன்கோயில் கோமதியம்மன் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில் மண் தலமாகவும்,  கரிவலம் பால்வண்ணநாதர் கோயில் நெருப்புத் தலமாகவும், தாருகாபுரம் மத்தியஸ்வரர் ஆலயம் நீர்த்தலமாகவும், தென்மலை திரிபூரநாதர் ஆலயம் காற்றுத் தலமாகவும், தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவனார் ஆலயம் ஆகாயத் தலமாகவும் போற்றப்படுகின்றன. இந்த ஆலயங்களின்  மத்தியில் அமைந்ததுதான் மத்தியஸ்வரர் ஆலயம்.  தாயார் அகிலாண்டேஸ்வரி அகிலத்தினை காக்கும் தாய். இவர் சிவபெருமானின் வலது புறத்தில் தனிச்சந்நதியில் கொலுவிருக்கிறார். விஷ்ணு துர்க்கைக்கு வடக்குநோக்கி தனிபீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. வைகாசி விசாக தெப்ப உற்சவத்தினை மிகச்சிறப்பாக நடத்துவார்கள் ஜமீன்தார் குடும்பத்தினர். பத்துநாள் திருவிழா. தேரோட்டமும் நடைபெற்றிருக்கிறது - 1952ம் ஆண்டுவரை. தற்போது தேர் சிதிலமடைந்து விட்டது. மீண்டும் இந்தத் தேரைப் புதுப்பித்து ஓட்டுவதற்கு ஜமீன்தார் வாரிசுகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தற்போது வைகாசி விசாகம் அன்று சிறு சப்பரத்தில் பவனி நடைபெறுகிறது.

பேய்த்துரை காலத்தில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஆலயத்தின் ஒரு பக்கம்  குளம் இருந்ததால், தேர்வலம் நாதகிரி மலையை சுற்றியபடி நடைபெற்றது. இந்தத் தேர் மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் இருந்திருக்கவேண்டும். ராஜ உடையில் கம்பீரமாக வந்து  பேய்த்துரை வடம் பிடித்து இழுப்பார். தேர் நிலைக்கு வரும்வரை கொஞ்சமும் ஒதுங்கமாட்டார். அது இரண்டு நாட்கள் ஆனாலும், உண்ணாமலும், உறங்காமலும் கூடவே வருவார். அதுமட்டுமல்ல, தன்னுடன் வடம் பிடித்து தேர் இழுக்கும் ஊர் மக்கள் அனைவரையும் தன்னைப் போலவே உணவை, உறக்கத்தை மறந்து அப்பணியில் ஈடுபடவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்! அப்படி ஒரு முரட்டு பிடிவாதம் அவருக்கு! 
      
பூஜை செய்வதில் ஜமீன்தாருக்கு பெருத்த ஈடுபாடு உண்டு. அதுவும் மாதம் தவறாமல் பௌர்ணமி பூஜை செய்வது இவர் வழக்கம். பூஜை என்றாலே ஏனோ தானோ என்று அலட்சியமாக, செய்யமாட்டார். அந்தப் பௌர்ணமி நாளில் தானும் தூங்கமாட்டார், அரண்மனையில் உள்ள யாரையும் தூங்க விடமாட்டார். எந்த ஆகாரமும் உட்கொள்ளாமல் ஒருநாள் முழுவதும் பூஜை செய்வார். இப்படி செய்த பூஜையின் பலனாக சில சித்திகள் இவருக்கு ஏற்பட்டது என்பார்கள்

°°சமூக வாழ்க்கையும் பிற விபரங்களும்°°

இக்கிராமத்தில் 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி 4098 பேர் வசிக்கின்றனர். இந்த ஊரில் பல்வேறு இனத்தவர்கள்  வாழ்கின்றனர். அவர்கள்  தேவர், ஆசாரி, பள்ளர், பறையர், அருந்ததியர் , வண்ணார்,  ஈழவர்,  ஆகியோராவர்.   இவர்களில் பெரும்பான்மையாரோக  தேவரினத்தவர் உள்ளனர். 

 இங்கு இரு துவக்கப் பள்ளியும், ஒரு நடுநிலைப்பள்ளியும், ஒரு மேல்நிலைப்பள்ளியும், ஐந்து சத்துணவுக் கூடமும், தலைமை தபால் நிலையம் ஒன்று, கிராம தபால் நிலையம் ஒன்று, மின்சார அலுவலகம் ஒன்று, கூட்டுறவு வங்கி ஒன்று, இரு நியாய விலை கடை, கிராமபுற கால்நடை மருத்துவமனை, நூலகம் இரண்டு, மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடமும் உள்ளது. இதன் நேரடி கட்டுப்பாட்டில் முள்ளிக்குளம், நகரம், துரைச்சாமியாபுரம், மலையடிக்குறிச்சி, தாருகாபுரம், வெள்ளானைக் கோட்டை, பட்டக்குறிச்சி போன்ற முக்கிய கிராமங்களின் நலன் இந்த ஊரின் சுகாதார நிலையம் மூலம் பேணப்படுகிறது. 

தலைவன் கோட்டை இன்று தனி பஞ்சாயத்தாக உள்ளது. 

இன்னும் வளரும். ............

அன்பன்;

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.