பாப்பாநாடு ஜமீன் வரலாறு

 தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "விஜயாத்தேவர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். தஞ்சையிலிருந்த பத்து கள்ளர் ஜமீன்களுள் பாப்பாநாடு ஜமீனும் ஒன்று. பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் சம்பந்திகளாவார்கள். பாப்பாநாட்டுக்குக் கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள "வெளுவாடி" எனும் ஊரில் இவர்கட்கு   ஒரு ‘அரண்மனை’ உண்டு. 

வெளுவாடி 
×-×-×-×-×-×-×
இந்த அரண்மனை இருக்கும் பகுதியான "வெளுவாடி" முன்பு சேந்தன்குடி 'மறவ'முத்தரையரான வழுவாட்டித்தேவர்களால் ஆளப்பெற்றதாகும். இது ஆவணங்களில் 'வளுவாடி'- வழுவாடி'- என குறிப்பிடப்பெற்றது. மறவரான சேந்தன்குடி -நகரம் பாளையக்காரர்கள் தமது முன்னோர்கள் பகுதியான திருநெல்வேலி மாவட்டம், தலைவன்கோட்டை ஜமீனுக்குட்பட்ட வடமலை மற்றும் நகரம் ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து வளுவாடி வந்து தமது குடிக்கேயுரிய மறத்தன்மை வலுவினால் அங்கே கோட்டை போட்டு ஆட்சிபுரிந்தார்கள். இந்த இடத்தின் கண் ஆட்சிபுரிந்தமை காரணமாக அவர்கள் வளுவாடியார் என்றும் வழுவாடியார் என்றும் அழைக்கப்பட்டார்கள். பின்னர் ஆதி ஆவிடை நல்ல விசையாத்தேவர் இதை கைப்பற்றவும்,  இவர்கள் சேந்தன்குடி பாளையக்காரர் ஆனார்கள்.  பிரிட்டிஷ் ஆவணங்களிலும் இவர்கள் "வளுவாடி ஜமீன்" என்றே குறிப்பிடப்பட்டனர். கி.பி 1674ல் வெளியிடப்பட்ட பட்டயம் ஒன்று சேந்தன்குடி சமீனை 'முத்தரைய வளுவாடி சமீன் ' (ஆவணம் 22/ 2011) என்று குறிப்பிட்டுள்ளது. முத்தரையர் என்பது பள்ளி -கள்ளர் -மறவர்-வலையர் -வடுகர்-வேட்டுவர் என பல்வேறு சாதிகளுக்குரிய ஒரு பட்டமாகும். இதில் வளுவாடி என்பதும் சாதிப்பெயரல்ல இடப்பெயரே என்பதும் இதன்மூலம் தெளிவாக விளங்குகிறது. 

பாப்பாநாடு 
-×-×-×-×-×-×-×
‘பாப்பாநாடு’ என்பது மத்திய கால நிர்வாக முறையான ‘நாடு’, ‘பெரிய நாடு’ என்பன போன்ற அமைப்பாகும். 

"பாப்பாநாடு பதினெட்டு கிராமம்"’ என்கிற சொலவடை  இப்போதும் அங்கு உண்டு. 
கரம்பயம்-
ஆம்பலாப்பட்டு-
மடத்துவாசல்
ஆவிடநல்லவிஜயபுரம்
பெரிய குமுளை
வேதவிஜயபுரம்
பாப்பாநாடு
புது காலனி
சின்னகுமுளை
சோழகன்குடிகாடு 
                    -உள்ளடக்கிய பதினெட்டு கிராமங்களும்  முன்பு விஜயாத்தேவர் வம்சாவழிகளால்ஆளப்பெற்றவையும்,
சோழகர் -வாண்டையார் -பணிபூண்டார் -சாளுவர் -விஜயாத்தேவர் - முதலியார் -கண்டியர் -கொடும்புறார் -ஆகிய 
‘முக்குலத்துகள்ளர்கள்பெரும்பான்மையாக வசிப்பவையும் ஆகும் .  மேலுள்ள சிற்றூரில் "ஆவிடநல்லவிஜயபுரம்" என்பது' ராஜஸ்ரீ. ஆதி ஆவிடை நல்ல விசையாத்தேவர்' எனும் புகழ்பெற்ற பாப்பாநாடு ஜமீன் முன்னோர் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். 
                          -   -    -    -   -   -

ஜெயங்கொண்டநாதர் கோயிலுரிமை!

மன்னார்குடி செயங்கொண்டநாதர் கோயிலுக்கு இந்த பாப்பாநாடு ஜமீன்கள் பல்வேறு கொடைகள் அளித்துள்ளனர். இவர்களின் முன்னோர் ஒருவரின் சிலை அக்கோயிலில் நித்திய வழிபாட்டில் உள்ளதிலிருந்து இவர்களின் மேன்மையை நன்கு அறியலாம். திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாற்று நூலில் இந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. . மேலும் இவர்களைப்பற்றி அந்த நூலில் ...

"ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு,  சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும்  நல்லவன் விசையாத்தேவரவர்கள் குமாரர் ராமலிங்க விசையாத்தேவரவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கும் செயங்கொண்டநாத சுவாமி" - என குறித்துள்ளமையால் செயங்கொண்டநாதர் கோயில் இவர்களின் உரிமைக்குரியதாக இருந்துள்ளதையும் உணரமுடிகிறது. 

                           - - -× - - ×- - -
திருமேனி அம்மன் கோயில் பல்லக்கு திருவிழா! 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
இந்தக் கிராமங்களின் பொதுக் கோவிலாக பாப்பாநாட்டுக்கு மேற்கே சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்தப் பதினெட்டு கிராமத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் திருமேனி அம்மனுக்கு திருவிழா எடுப்பர். பத்து நாட்களுக்கு மேல் மண்டகப்படிகள், இரவில் புகழ் பெற்ற நாடக ‘செட்’ களின் நாடகங்கள், வாண வேடிக்கை எல்லாம் நடக்கும். இறுதி நாள் பல்லக்குத் திருவிழா அன்று திருமேனி அம்மன் பாப்பாநாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, கணக்கன் குளத்தருகில் உள்ள ஊர்ச் சாவடியில் வைக்கப்படுவார். நாள் முழுவதும் வழிபாடுகள் மேற்கொண்டு இரவில் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுவார். இந்தத் திருவிழாவைத் திட்டமிட்டு நடத்தும் உரிமை, பாரம்பரியமாக அக்கிராமங்களின் கள்ளர் சாதியினருக்கே உண்டு.
இந்தக் கிராமங்கள் அனைத்தும் பழைய தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்தவை.  பாப்பாநாடு, மதுக்கூர் முதலியன அப்படியான ஜமீன்தாரி பகுதிகள். பாப்பாநாடு ஜமீன்தார் ராஜஸ்ரீ. ராமலிங்கம் விசையாத்தேவர் அவர்கள் காசியின் அன்னதானக்கட்டளைக்கு திருமாஞ்சோலை எனும் ஊரை கொடையாக அளித்துள்ளார். 

திருமாஞ்சோலைச் செப்பேடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - திருமாஞ்சோலை
ஊர் - திருப்பனந்தாள்
வட்டம் - திருவிடைமருதூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தெலுங்கு
அரசு / ஆட்சியாளர் - பாப்பாநாடு ஜமீன் / இராமலிங்கம் விசையாத் தேவர்
வரலாற்று ஆண்டு - கி.பி.1736
விளக்கம் - 
          முக்கால் வட்ட வடிவில் அமைந்த கைப்பிடியின் அடிப்பகுதியில் பீடத்தின்மேல் முத்தலைச் சூலமும் அதன்கீழ் ஒரு சிவலிங்கமும் வரைகோட்டு ஒவியத்தில் வரையப் பட்டுள்ளது.

          இராசேந்திர சோழவளநாட்டுப் பொய்யூர்க் கூற்றத்தில் உள்ளது பாப்பாகுடி நாடு. அங்கு குறுநில மன்னராக விளங்கி அதிகாரம் செலுத்துபவர்கள் விசையாத்தேவர் பரம்பரையினர். அம்மரபில் வந்த ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு ஜமீன்தாரைக்குறிப்பிடும்போது...

"ராசஸ்ரீ ஆதி ஆவிடை விசையா தேவரவர்கள் நல்லவன் விசையா தேவரவர்கள் குமாரர் ராசஸ்ரீ ராமலிங்கம் விசையா தேவர் அவர்கள்"- என குறிப்பிடுகிறது.  பாப்பாநாடு பற்றிய தேடலில் இன்னும் முழுமையான ஆய்வுகளோடு மீண்டும் பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன். 

நன்றி :
1.செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட /        
சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்

குறிப்புதவிகள் - செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்,

திருவாரூர் மாவட்டத் தொல்லியல் நூல். 
                   
அன்பன் :

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்