இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்

27 May 2022

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராமசபை கூட்டங்களில் இனி 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவ.1-ம் தேதி'உள்ளாட்சிகள் தினமாக' கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.


மேலும் இனி ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்றும், அத்துடன் சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து மாவட்டத்திற்கு ஒன்று என 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையுடன், உத்தமர் காந்தி விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதன்படி, 2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், உலக தண்ணீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 ஆகிய தேதிகளிலும் இனி கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்.


மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தண்ணீரை சிக்கனமாக கையாண்டு "உயிர்போல் காப்போம்" என்ற உறுதிமொழி ஏற்கப்படும். நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.