திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி போர் தான், ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் பிடியின் கீழ் வீழ்வதற்கு வித்திட்ட முக்கியப் போர்

22 January 2022


*1760 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே நடந்த வந்தவாசிப் போர் இந்திய- ஐரோப்பிய வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த போருக்குப் பின்னர் இந்தியாவை ஆளும் அதிகாரம் பிரிட்டிஷ்காரரிடம் முழுமையாகச் சென்றது*.
*திருவண்ணாமலை அருகே நடந்த வந்தவாசி போர் தான், ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் பிடியின் கீழ் வீழ்வதற்கு வித்திட்ட முக்கியப் போர்*
*பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சு படைக்கும் தென்னிந்தியாவைக் கைப்பற்றுவதில் பெரும் போர் நடந்து கொண்டிருந்த 18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. பிரெஞ்ச் படை வசமிருந்த வந்தவாசி கோட்டையை கைப்பற்ற கி.பி.1752ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும், கி.பி. 1757ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் பிரிட்டிஷ் படையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பிரிட்டிஷ் படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது*
*பின்னர் கி.பி. 1760-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதியன்று தளபதி சர் அயர்கூட் தலைமையில் பிரிட்டிஷ் படை மீண்டும் வந்தவாசி கோட்டையை தாக்கியது. இதில், தளபதி கவுண்ட் டி லாலி தலைமையிலான பிரெஞ்ச் படையினருக்கும், தளபதி சர் அயர்கூட் தலைமையிலான பிரிட்டிஷ் படையினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது*

*இப்போரில் பிரிட்டிஷ் படையில் 1,700 பேரும், பிரெஞ்ச் படையில் 2,000 பேரும் போரிட்டனர். இதில், பிரிட்டிஷ் படை வெற்றி பெற்றது. மூன்றாம் கர்நாடகப் போரை பிரிட்டிஷ் வெல்வதற்கும், இந்தியாவில் பலமாகக் கால் ஊன்றி ஆட்சி, அரியணையில் அமர இந்த வந்தவாசிப் போர் தான் ஆங்கிலேயருக்கு உதவியது என்பது வரலாறு. இத்தகைய வரலாற்றுப் போர் நிகழ்ந்த தினம் இன்று*