ஆப்கானிஸ்தான் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

04 September 2021

ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த பஞ்ச்ஷிர் மாகாணமும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களிடம் வீழவில்லை என்றும், அவர்களுக்கு எதிரான சண்டை தொடர்வதாகவும், முன்னாள் துணை அதிபர் அம்ருலே சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.

 ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலைநகர் காபூலை கைப்பற்றி தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். இதையடுத்து, அதிபராக இருந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பியோடினார். தற்போது ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தலிபான்களால், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை மட்டும் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது. தொடர்ந்து சண்டை நடந்து வந்த நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றிவிட்டதாகவும் தற்போது ஆப்கானிஸ்தான் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.