இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம்.இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது.