தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

13 April 2021

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் புத்தாண்டு நன்னாளில், தமிழக மக்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் அமைதி, வளம், மகிழ்ச்சி பெருகட்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாரம்பரியம், கலாசாரத்தின் அடையாளமாக தமிழ் புத்தாண்டு திகழ்வதாக குறிப்பிட்டுள்ள ஆளுநர், தமிழக மக்கள் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மலரும் தமிழ் புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், புத்தாண்டு திருநாளாம் ’விஷூ’ திருநாளை உற்சாகமாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த ’விஷூ’ தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.