கோடை சிறப்பு மலை ரயில் சேவை இன்று தொடக்கம்

21 May 2022

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது.


மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது . அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது .


ஊட்டியில் கோடை சீசன் நடைபெற்று வருவதாலும் , பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . கூட்டத்தால் டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .இதை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம் - உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது . மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று முதல் ஜூலை மாதம் 16 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்படுகிறது .


இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வருகிற 27 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்பட உள்ளது . சிறப்பு ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது .


ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது . மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ .1,210, இரண்டாம் வகுப்பு ரூ .815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ .1,575, இரண்டாம் வகுப்பு ரூ .1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .