ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

27 January 2021

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீரங்கம்,ஜன,27. 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா, ரெங்கா கோ~த்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4ம் திருநாளான 22-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8ம் நாளான நேற்று  மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று  காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார்.  4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோ~த்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 10 மணிக்கு  நிலையை வந்தடைந்தது.  பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை  (28-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 29-ந் தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார்(கூடுதல் பொறுப்பு), உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்