சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை.!

22 October 2020

சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் துணை நடிகை சரளா. இவர் கார்த்தி நடிப்பில் வெற்றிபெற்ற 'கைதி', வைபவ் நடித்த 'சிக்ஸர்' உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'சிவகாமி' போன்ற டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் சமூகவலைதளம் மூலம் ஒரு விளம்பரம் பரவியது. அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க நடிகை தேவையென குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணிற்கு நடிகை சரளா வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு குறித்து விசாரித்ததாகவும், ஆனால் எதிர்முனையில் இருந்த நபர் முறையான தகவல் தெரிவிக்காமல் போட்டோ, வீடியோ அனுப்புமாறு கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் வேறு சில செல்போன் எண்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி என ஒருவர் பேசி அடிக்கடி தொல்லை தருவதாக நடிகை சரளா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆடிஷனுக்கு நேரில் வர வேண்டும் எனவும் பாலியல் தொல்லை தருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆன்லைன் மூலம் அளித்தே புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளது. தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் பெண்களிடம் தவறாக பேசுவதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு புகார்கள் தொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.