முகப்பு பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த RSS அமைப்பு சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்
பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து இழிசெயல் செய்த RSS அமைப்பு சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம் செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோயியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சுப்பையா ஆகியோர் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக மருத்துவர் சுப்பையா கார் நிறுத்துவது தொடர்பாக, தனது வீட்டின் அருகில் வசித்து வந்த பெண் ஒருவருடன் தகராறில் ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனை பூதாகாரமாக வெடித்த நிலையில், இரு தரப்பு பேச்சு வார்த்தையின் கீழ் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவரை உடனே எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவரது நியமனத்திற்கு திமுக எம்.பி.கனிமொழி, சு.வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.