படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார்

12 April 2021

டைரக்டரும், தயாரிப்பாளருமான திரு இயக்கி வரும் புதிய படம், ‘பரமபத விளையாட்டு.’ இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வந்தார். அவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா ஆகியோரும் நடித்து வந்தார்கள்.படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் முடிவடைந்தன. படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தார்கள். டிரைலரும் தயாரானது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கதாநாயகி திரிஷா கலந்து கொண்டால், படத்தின் வியாபாரத்துக்கு உதவியாக இருக்கும் என்று தயாரிப்பாளரும், டைரக்டருமான திரு கருதினார். இதற்காக திரிஷாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் திரிஷா, விழாவுக்கு வர மறுத்ததுடன், ‘‘நயன்தாரா நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவதே இல்லை. எனக்கு ஒரு நீதி. அவருக்கு ஒரு நீதியா?’’ என்று கேட்டாராம்.

இதைத்தொடர்ந்து திரிஷா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான திரு புகார் கொடுத்தார். அதன்பேரில், திரிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

‘பட விழாவில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு தடை விதிக்கப்படும்’’ என்று எச்சரித்தபின், விழாவுக்கு வருவதாக திரிஷா ஒப்புக்கொண்டாராம்.