சென்னை தியாகராய நகர், கண்ணம்மா பேட்டை, மேற்கு மாம்பலம், கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், போரூர், வளசரவாக்கம் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
கோடம்பாக்கம், வடபழனி, பாடி, அம்பத்தூர், நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நேற்றிரவு அப்பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய மழையால் நாச்சியூர் அருகே இருபதிற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
மேலும் குடியிருப்புகளில் நீர் புகுந்ததோடு சூறாவளிக் காற்றால் வீடுகளின் மேற்கூரைகளும் கடைகளில் இருந்த பொருட்களும் தூக்கி வீசப்பட்டன. இந்நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் மழையால் தங்கள் உடைமைகளை இழந்ததாலும் வேதனையடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.