ஓக் மரம் கிறிஸ்துமஸ் மரமாக மாறிய சுவாரஸ்ய வரலாறு..!

25 December 2021

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.


கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, சிகப்பு நிற வெல்வெட் அங்கி ,சிரித்த முகத்துடன் இருக்கும் ‘சாண்டா கிளாஸ் தாத்தா’ மற்றும் ஏசுநாதர் உயிர்ப்பின் அடையாளமாக பார்க்கப்படும் ’ஓக் மரம்’ ஆகிய இரண்டும் முக்கிய அங்கங்களாக உள்ளன. அதிலும், இந்த ஓக் மரம் ’கிறிஸ்துமஸ்’ மரமாக மாறிய வரலாறோ மிகவும் சுவாரஸ்யமானது. 


கி.பி. 10ம் நூற்றாண்டில் ஜெர்மனியின் வாழ்ந்து வந்த புனித போனிஃபேஸ் என்பவர் கிறிஸ்துவ மக்கள் பல மூட நம்பிக்கைகளை பின்பற்றி வருவதை கண்டு எதிர்த்தார். அப்போது, ஒரு இடத்தில் ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். இதைக் கண்டு கோபம் கொண்ட அவர், அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார். அதோடு மட்டுமில்லாமல், மீண்டும் மரம் துளிர்த்துவிடாமல் இருக்க அதன் வேர்ப்பகுதியை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.


பிறகு புனித போனிஃபேஸ் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார். இதற்கிடையில் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றது. இதை பார்த்த மக்கள் இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக்க பார்க்கத் தொடங்கினார்கள்.
தனது மத ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே பாதிரியார் போனிபேஸ் வந்தார். அப்போது அவர் வெட்டிபோட்ட மரம் மீண்டும் கம்பீரமாக வளர்ந்திருப்பதை பார்த்து வியந்து போனார். உடனடியாக அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது.


அதை தொடர்ந்து சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்மஸ் மரத்தை முதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்மஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறப்படுகிறது.


இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட பயணங்கள் அவருக்கு ஜெர்மனிநாட்டு இளைஞர் இளவரசர் ஆல்பர்ட் டுடன் காதலை வளர்த்தன. திருமணம் செய்துகொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.


கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்மஸ் மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்மஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும் எனவே இயேசு மனிதம் உருவான நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்றும் கிறிஸ்தவ விளக்கங்கள் பரிமாறப்படுகின்றன.


ஹைலைட்ஸ்:


கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது.
ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்மஸ் மரத்தை முதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள்.