நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

12 May 2021

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.


திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பிறந்த நெல்லை சிவா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். சினிமா மீதான காதலால் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகே
பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' படத்தில் நடித்தார். இதுவே அவரது முதல் படம்.

'மகா பிரபு', 'வெற்றிக்கொடி கட்டு', 'கண்ணும் கண்ணும்', 'சாமி', 'திருப்பாச்சி', 'அன்பே சிவம்', 'கிரீடம்', 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'அறை எண் 302-ல் கடவுள்', 'படிக்காதவன்', 'தோரணை', 'கந்தசாமி', 'தமிழ்ப் படம்', 'கிரி', 'பாபநாசம்', 'மிருதன்' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சில படங்கள் இன்னும் வெளியாகவில்லை. சீரியல்களிலும் நெல்லை சிவா நடித்து வந்தார்.

நெல்லைத் தமிழில் பேசுவதையே தனிப் பாணியாகக் கொண்டு நடித்த இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்களின் அணியில் இணைந்து தனித் திறமையுடன் வலம் வந்தார்.

35 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நண்பகலில் அவரது சொந்த ஊரான பணகுடியில் நடைபெற உள்ளது.

நெல்லை சிவா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.