இஸ்லாம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் தயாரிப்புகளை அரபு நாடுகள் பல புறக்கணிப்பு

26 October 2020

முகமது நபி , இஸ்லாம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் தயாரிப்புகளை அரபு நாடுகள் பல புறக்கணித்து உள்ளன.


 பிரான்சில் ஆசிரியர் ஒருவர் முகமது நபியை அவமதித்ததாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.


மேக்ரானின் கருத்துக்களுக்கு அரபு நாடுகள் பலவற்றில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பிரான்சில் சில இஸ்லாமிய சமூகங்களில் அதிகாரத்தை கையில் எடுக்கப்போவதாக இஸ்லாமிய பிரிவினைவாதம் அச்சுறுத்துவதற்கெதிராக போராட உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இஸ்லாம் ஒரு மதமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலிலிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் மேக்ரான்.


அவரது கருத்துக்களும், மீண்டும் பிரான்சில் வெளிப்படையாகவே முகமது நபியின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை கட்டிடங்களின் சுவர்களில் பிரமாண்டமாக ஒளிப்படமாக திரையிட்டதும், சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, பிரெஞ்சு தயாரிப்புகளை அரபு நாடுகளும், துருக்கியும் தங்கள் பல்பொருள் அங்காடிகளில் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரமும் துவக்கப்பட்டுள்ளது.