திருவாரூர் அருகே லாரி மோதி போலீ்ஸ்காரர் படுகாயம் தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு!

10 June 2021


திருவாரூர் அருகே லாரி மோதி போலீ்ஸ்காரர் படுகாயமடைந்ததையடுத்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார். இவர் கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தார். நிலையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்காகோட்டூர் அருகே வளப்பாற்றுபாலம் எதிரே பேரளத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரர் செல்வக்குமார் படுகாயம் அடைந்தார். அப்போது இவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் லாரியின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வக்குமாருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படு்த்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நிருபர் மீனா திருவாரூர்