டெல்லி காற்று மாசு காரணமாக உடல்நலம் பாதிப்பு: தற்காலிகமாக கோவா குடிபெயர்ந்தார் சோனியாகாந்தி

20 November 2020

ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி, டெல்லியில் தீவிரமடைந்துள்ள காற்று மாசு காரணமாக, தற்காலிகமாக கோவாவில் தங்க முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் இன்று மதியம் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருக்கும் சோனியாகாந்தி பல ஆண்டுகாலமாக ஆஸ்த்துமா நோய் காரணமாக  அவதிப்பட்டு வருகிறார்.  இதன் காரணமாக அவருக்கு  மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்,  டெல்லியில் உயர்ந்து வரும் காற்று மாசு காரணமாக, சோனியாவுக்கு ஆஸ்த்துமா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், உடனே அவர் இருப்பிடத்தை மாற்றும்படி அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். அதன்படி, சூடான பகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, கோவா போன்ற மாநிலங்களில் சில காலம் தங்கியிருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.



இதையடுத்து சோனியாகாந்தி தற்காலிகமாக கோவாக்கு குடிபெயர்ந்துள்ளார். அவருடன் மகன் ராகுல்காந்தியும் வந்துள்ளார்.