தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு

03 April 2021

"குருவும், போதகரும் ஆகிய நான் உங்களுடைய பாதங்களை கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர், மற்றவருடைய காலடிகளை கழுவ கடமைப்பட்டு இருக்கின்றீர்கள்" என்று கூறி இயேசு கிறிஸ்து உலகில் குருத்துவத்தையும், நற்கருணையையும் நேற்றைய நாளில் ஏற்படுத்தினார். இதனை நினைவு கூறும் வகையில் அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் சடங்கு நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் பாதம் கழுவும் சடங்கு நேற்று நடந்தது. இதனை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில், ஆயரின் செயலர் ஆபேல், பங்கு தந்தையர்கள் சகாயராஜ், ஜெயசீலன் பிரபு, சாம்சன் ஜெபராஜ், பாதிரியார் பாலா ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர். இதையொட்டி பேராலயத்தில், புனித வளனார் பங்கை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அமரவைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு தொடங்கியது. அதன்பிறகு பாதம் கழுவும் சடங்கு நடந்தது. இதில் ஆயர் முக்கியஸ்தர்களின் பாதங்களை கழுவினார். அதன்பின்னர் நற்கருணை வழிபாடு நடைபெற்று, நற்கருணை பேராலய பீடத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு நற்கருணை ஆராதனை நடைபெற்றது.