ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள்

02 June 2021


திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி கிராமத்தில் 1880 அப்டோபர் 2ம் நாள் ராமசாமி நாடார், சிவணைந்த அம்மையார் அவர்களுக்கு சேர்மன் அருணாசல சுவாமி பிறந்தார். அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சிறுவயதிலேயே யோகக்கலை பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி பயின்றார். 

அங்கும் அவர் மவுன விரதம் இருந்து பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து வந்ததால் நாளடைவில் பிரபலமானார். அவரைக் காண பொது மக்கள் திரள ஆரம்பித்தனர். அப்படி தன்னைக் காண வரும் மக்களுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் வைத்திய தொழில் செய்து வந்த தனது குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி சகல நோய்களையும் குணப் படுத்தினார். சாதி மதம் பாராமல் அனைத்து சமூக மக்களுக்கும் தொண்டாற்றினார் அருணாசல சுவாமிகள். அவரது நீதியும் நேர்மையும் அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப் பணியாற்றினார். 



அதாவது அவரது 26ம் வயதிலேயே சேர்மனானார். இப்பணியை சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற பெயர் பெற்றார். சேர்மன் சுவாமி ஒரு நாள் தன் இளைய சகோதரர் கருத்தபாண்டி நாடாரை அருகில் அமர்த்தி பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில் (கலக வருடம் 1083ம் ஆண்டு) 1908 ஆண்டு ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம் தேதி) செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று கூறினார். 

ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில் கொஞ்சும் தாமரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின் அருகில் என்னை சமாதி செய்ய வேண்டும். சமாதி குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த நேரத்தில் மேலே கருடன் மூன்று முறை வட்டமிடும். கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாதி குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து மூடிவிடுங்கள் என்று கூறினார். சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது வயது 28! திருமணம் ஆகாமலேயே சமாதி ஆனார். அவர் சொன்ன வாக்கின்படியே நடந்தது. 

அன்று முதல் வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் ஆலமரத்தின் ஓரமாக சமாதி கொண்டார். இங்கு அவரை த்ரிசிக்க வரும் பக்தர்களுக்கு மண்ணும், தண்ணீரும் திருமருந்தாக கொடுக்கப்படுகிறது. அருணாசல சுவாமியை வழிபட வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஈரஉடையோடு வலம் வந்து, கொண்டு வரும் புனித நீரை லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற வழக்கத்தை கொண்டிருந்தனர். இதனால் மண்ணால் செய்த லிங்கம் கரைந்து விடுமென்று கருதி கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும் என் பக்தர்கள் நினைத்தார்கள். 

ஆனால் மண்ணால் செய்து வைத்த லிங்கம் புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு பதிலாக வளர்ந்து கொண்டு வருவதாக ஐதீகம் உண்டு. இதனால் இன்றும் மண்லிங்கமே மூலஸ்தானமாக விளங்குகிறது. இது சுயம்பாக அமைந்த லிங்கமாகும். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார் என்கிற நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள்.