தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்… அருவருக்கத்தக்க வகையில் சமூகவலைதளங்களில் பதிவு

10 October 2020

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடாததால் தோனியின் ஐந்து வயது மகள் ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டுவருகின்றனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.  

பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்லத் தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை தோல்வியைத் தழுவியது.

தோனியும் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டுவருகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.