தெலங்கானாவில் கனமழை உயிரிழப்பு 70-தாக உயர்வு

20 October 2020

தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் வீதிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள் அடித்துச்செல்லப்பட்டு நகரங்கள் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாயியுள்ளன. பல நகரங்கள் இன்னமும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சர் கே.டி.ராமராவ் கூறியதாவது, 1908ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை நீடிப்பதாலும், மேலும் 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தாழ்வானப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ஹைதராபாத் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உயிரிழந்த 33 பேரில் 29 பேரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மாநகரில் எந்தந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்தந்த பகுதிகள் வசிப்பவர்களை வீடு வீடாகச் சென்று அவர்களை வெளியேற்றி, நிவாரண முகாம்களில் தங்க வைப்போம். கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு நூற்றாண்டு கால அளவில் கண்டிராத அளவு மழை கடந்த வாரத்தில் பெய்துள்ளது என அமைச்சர் கூறினார்.