நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி

20 June 2022

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடத்தியது. இதன்படி மொத்தம் 30 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த‌து. ஆனால், தனது தாய் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்துக் கொள்வதற்கு ஏதுவதாக விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, இன்று (திங்கள் கிழமை) விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜராக உள்ளார்.