மதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள் - ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு

27 October 2020

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் காரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவினர் திருமாவளவனை கண்டித்து இன்று போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர் போராட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டிருந்த பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டியம்மாள் எல்லாளன் ஆகியோர் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

அச்சமயம் பாஜக கொடி பொறித்த நான்கு சக்கர வாகனம் ஒன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே சென்றது அதனை வழிமறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காரை அடித்து நொறுக்கினர் காரின் முன் புறம் இருந்த பாஜகவின் கொடியை உடைத்து எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி யது.

போலீசார் உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பிறகு பாஜக நிர்வாகிகள் அனந்த ஜெயம், கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்கள் தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளான போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.


ராமலிங்கம்
மதுரை மாவட்டம் செய்தியாளர்