தேசிய கபடிப் போட்டியில் பங்கேற்க ஆலங்குளம் மாணவி தேர்வு ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை

05 December 2022

தேசிய கபடிப் போட்டியில் பங்கேற்க ஆலங்குளம் மாணவி தேர்வு! ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை!

ஆலங்குளம், டிச. 5:

ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, தேசிய கபடிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 
 32ஆவது தேசிய சப் ஜூனியர் மகளிர் கபடிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப் ஜூனியர் வீராங்கனைகள் அணித் தேர்வு அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.

இதில், மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள காளாத்திமடத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேர்மன்- முத்துகனி தம்பதியின் இரண்டாவது மகளும், தென்றல் அணி வீராங்கனையுமான ஆல்ரவுண்டர் சே.அஜி மாய்ஸா தமிழ்நாடு‌ மகளிர் அணிக்காக தேர்வாகியுள்ளார்.

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இம்மாணவியின் வீட்டில், 3 பெண் குழந்தைகள் இருந்தும், அவர்களது பெற்றோர் இந்த மாணவியை கபடிப் போட்டியில் சாதனை படைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், முழு சுதந்திரம் அளித்து, உள்ளூர் பயிற்சியாளர்களின் ஒத்துழைப்போடு இந்த நிலையை அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இம்மாணவியை, தென்காசி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக நிர்வாகிகள், மாணவியின் பயிற்சியாளர்கள் மணி டேவிட், உதயசூரியன், ஸ்டீபன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.