பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை அதிகாரிகள் ஒட்டினர்

21 January 2022

ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி பொள்ளாச்சியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொங்கல், தைப்பூசம் ஆகிய பண்டிகைகள் வந்ததால் கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கோவில்கள் மூடப்பட்டன.இந்த நிலையில் தற்போது மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளதால் பழனிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கி கொள்வதை தடுக்க பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி, பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையின் ஓரத்தில் செல்ல வேண்டும். வெள்ளை நிற கோட்டை தாண்டி செல்ல கூடாது. இரவு நேரங்களில் கவனமாக நடந்து செல்ல வேண்டும். தூக்கம் வந்தால் பாதுகாப்பான இடங்களில் ஓய்வு எடுத்து விட்டு, அதன்பிறகு பாத யாத்திரையை தொடங்க வேண்டும். இதற்கிடையில் சாலை விபத்துகளை தடுக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு செல்லும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.மேலும் நடந்து செல்லும் பக்தர்களின்ஆடைகளின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையில் துணியால் ஆன ஒளிரும் பட்டைகளை பக்தர்களின் கைகளில் கட்டி வருகிறோம். கெடிமேடு வழியாக செல்லும் பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. எனவே பக்தர்கள் கால்வாயில் இறங்கி குளிக்க கூடாது. பக்தர்கள் பாதுகாப்பான முறையில் பாத யாத்திரை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி