இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது : பெகாசஸ் குறித்து அமித்ஷா கருத்து!

19 July 2021


மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் புகார் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இன்று, ’’மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவான விளக்கம் தெரிவிக்கவேண்டும்’’ எனறு தன் கருத்தை வெளியிட்டார்.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மத்திய அரசு யாரையும் ஒட்டு கேட்கவில்லை என கூறியிருந்தார், ஆனால் வைஷ்னவ் தொலைபேசியையே 2017 முதலாக ஒட்டு கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் போன்ற பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் –( இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரகசிய மென்பொருளாகும்) ரகசிய மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

சர்ச்சைக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது என பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் அமித்ஷா கருத்து.