அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- 8 பேர் பலி
17 April 2021
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.
துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து துப்பாக்கி கட்டுப்பாடுகள் தொடர்பாக ஜோ பைடன் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனினும், துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நபர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.