சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

01 February 2021

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை; அரியலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

போக்சோவில் கைது

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் நேரு(வயது 30). கூலித்தொழிலாளியான இவர், 17 வயது சிறுமி ஒருவருடன் அடிக்கடி பேசி பழகி, தனிமையில் சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த 22.10.2018-ந் தேதி நேரு, அந்த சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்று, அவரை திருமணம் செய்து கொள்ள அழைத்து வந்ததாக கூறியுள்ளார். பின்னர் திருச்சிக்கு அழைத்து சென்று விடுதியில் தங்கியுள்ளார்

இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நேருவும், சிறுமியும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். பின்னர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி, அந்த சிறுமியை அரியலூர் லிங்கத்தடிமேடு பள்ளியில் உள்ள காப்பகத்தில் தங்கவும், நேருவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த வழக்கின் விசாரணை அரியலூா் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யதாரா, நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் நேருவுக்கு, 363 சட்டப்பிரிவின்படி பெண் கடத்தலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், 366ஏ போக்சோ சட்டப்பிரிவின்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை கட்டத்தவறினால் இருபிரிவுகளுக்கும் தலா 6 மாத சிறை தண்டனையும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நேருவை, போலீசார் பாதுகாப்பாக கோர்ட்டில் இருந்து அழைத்து சென்று திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.!

செய்தியாளர் : கார்த்தி