பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு  : எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

11 January 2022

திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது.
 
திமுக அரசு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கொண்டுள்ளனர்..21 பொருட்கள் தருவதாக அறிவித்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக, வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
 
பொங்கல் பரிசு தொகுப்பு எடுத்துச் செல்வதற்கு கட்டை பை வீட்டிலிருந்து வரும்போது எடுத்து வரும்படி அறிவித்துள்ளனர். பொருட்களை எடுத்துச் செல்வோருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன.பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை  வழங்குவது  கண்டிக்கத்தக்கது. பொதுமக்களுக்கு வழங்கும்  பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றவையாக வழங்கப்படுவதாக பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் வீடியோவாக வெளிவந்த வண்ணம் உள்ளன.பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகின்றன..
 
குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது.இதன் மூலமாக கமிஷன் கிடைப்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது.கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்,பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளை அடிப்பது தான் மிச்சம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார்.
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகும் இது போன்று பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற பொருட்களையே வழங்குகிறார்கள்.மேலும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி,சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படவில்லை.
 
 
திமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம். ஏற்கனவே நான் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள்.
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பொய் வழக்கு  திட்டமிட்டு போடப்பட்டது.திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தி வருகிறது.திமுக அரசை பொறுத்தவரை விளம்பரம் மட்டுமே, முதலமைச்சர் டீ குடிப்பதற்கும், சைக்கிள் ஓட்டும் போதும் தனது பாதுகாப்புக்காக 500 காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு கொரோனா பரவலை சரியான வழியில் கட்டுப்படுத்த தவறிவிட்டது.
 
ஏற்கனவே கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதை  பயன்படுத்தி தான் தற்போது கட்டுப்படுத்தினார்கள்.,தனியாக எதுவும் வாங்கவில்லை ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. வேண்டியது.அதிமுக அரசின் ஆலோசனைகள் பெற்று இருந்தால் கொரோனா பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது.தமிழக அரசு எல்லாவற்றிற்கும் குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது.ஆனால் செயல்பாடுகள் இல்லை.திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது.நாட்டிற்கு வழிகாட்டியாக செயல்படும் அரசாங்கம் என்று கூறுகிறார் ஸ்டாலின் ஆனால் பொங்கல் பரிசுப் பொருட்களை தரமற்றதாக கொடுப்பதுதான் வழிகாட்டியா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
 ஆன்லைன் சூதாட்டம்  தடுக்க அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறம்பட வாதாடததால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் வந்துவிட்டது.இதனை உடனடியாக தடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் கல்லூரியும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை தான் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.