ஆட்டுக்கு தாடி எதற்கு ? மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு ?

31 December 2021

மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தை ஆளும் அரசும் வெவ்வேறு கட்சிகளாக இருக்கும் சூழலில், ஆளுநருக்கும் அமைச்சரவைக்குமான பனிப்போர் அதிகமாகிறது.

  
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகிக்கும் பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாளும் பிராந்தியக் கட்சிகள், மாநில சுயாட்சி என்று முழக்கமிட்டு வரும் நிலையில், இந்த மசோதா முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 

ஆளுநர் என்பவர் யார்?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலாக ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. அப்போதைய ஆளுநர் நிர்வாகத் தலைவராக விளங்கினார். பிறகு இந்தியா முழுமைக்குமான அதிகாரம் வழங்கப்பட்டபிறகு தலைமை ஆளுநர் என்றோ வைசிராய் என்றோ அழைக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகும் ஆளுநரை நியமிக்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. 
1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு மாநில முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகே ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. எனினும் அது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான அரசியலமைப்புத் திருத்தங்கள் எதுவும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. 
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு நிர்வாக அதிகாரங்கள், சட்டமியற்றும் அதிகாரங்கள், நிதி மற்றும் முடிவெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்டுப்படுத்தலாம். 

நிர்வாக அதிகாரங்கள்

* மாநிலத்தின் முதலமைச்சரை ஆளுநரே நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின்பேரில், அமைச்சர்களையும் நியமிக்கிறார். 
* மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் ஆளுநராலேயே நியமிக்கப்படுகின்றனர். 
* மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனமும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டதே.
* மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரே நியமிக்கிறார். 


சட்டமியற்றும் அதிகாரங்கள்


* மாநில சட்டமன்றத்தைக் கூட்டும், கலைக்கும், ஒத்திவைக்கும் அதிகாரம் பெற்றவர் ஆளுநரே.
* ஆளுநரின் அனுமதிக்குப் பின்பே, எந்த ஒரு மசோதாவும் சட்டமாக உருப்பெறும்.
* பண மசோதாவைத் தவிர பிற மசோதாக்களை, ஆளுநர் திருப்பி அனுப்பலாம். எனினும் அமைச்சரவை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆகவேண்டும். 

நிதி அதிகாரங்கள்

* மாநிலத்தின் நிதி அறிக்கையை (Budget) ஆளுநர்தான் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கிறார்.
* மானியக் கோரிக்கைகள் அனைத்துமே ஆளுநரின் பரிந்துரையில்தான் எழுப்பப்படுகின்றன.
* அதேபோல மாநில அரசின் திடீர் செலவுகளைச் சமாளிக்க, அவசர கால நிதியைப் பயன்படுத்தவும் ஆளுநரே ஒப்புதல் அளிக்கிறார்.

முடிவெடுக்கும் அதிகாரங்கள் 

* தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில், ஆளுநரே முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கிறார்.
* அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி அவசர காலங்களில் குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலோடு, ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். 
அரசமைப்புச் சட்டத்தின்படி, குடியரசுத் தலைவர்தான் ஆளுநரை நியமிக்கிறார். இடமாற்றம், திரும்பப் பெறுதலையும் முடிவெடுக்கிறார். இதனால், ஆளுநர் குறித்த முடிவுகளும் அறிவிப்புகளும் மத்திய அரசின் விருப்பமாகவே அமைந்துவிடுகிறது. மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தை ஆளும் அரசும் வெவ்வேறு கட்சிகளாக இருக்கும் சூழலில், ஆளுநருக்கும் அமைச்சரவைக்குமான பனிப்போர் அதிகமாகிறது.  

ஆளுநர் பதவியே தேவையில்லை

எந்த மாநிலத்துக்கும் ஆளுநர் பதவியே தேவையில்லை என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் மேலும் கூறும்போது, ''மாநிலத்துக்கு ஆளுநர் பதவி தேவையா என்று அரசியலமைப்புச் சாசன உருவாக்கத்தின்போதே விவாதிக்கப்பட்டது. ஆளுநர் என்பவர் யார், அவர் ஏன் நியமிக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்தன. மாநில உறவுகளை ஆராய 1969-ல் தமிழக அரசால் ராஜமன்னார் குழு நியமிக்கப்பட்டது. 
இதற்கு முன்பாகவே மத்திய நிர்வாகக் குழு சார்பில் அறிக்கை வழங்கப்பட்டது. அதற்குத் தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தையா எம்.பி. இருந்தார்.  துணைக் குழுவில் காங்கிரஸைச் சேர்ந்த சென்னை மாகாணத் துணை முதல்வர் எம்.பக்தவச்சலம் உறுப்பினராக இருந்தார். அப்போது மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்தது. ஆனாலும் தமிழக காங்கிரஸ், ஆளுநர் பதவியை எதிர்த்தது. அதாவது திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே ஆளுநர் பதவி விமர்சிக்கப்பட்டது.


மத்திய அரசின் ஏஜெண்ட்டுகள்


கடந்த 75 ஆண்டுகளாகவே ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜெண்ட்டுகளாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். இப்போது தமிழகத்தில் எழுவர் விடுதலை, நீட் தேர்வு தொடர்பான கோப்புகளை ஆளுநர் இழுத்தடிக்கிறார். எழுவர் விடுதலை குறித்து உயர், உச்ச நீதிமன்றங்களே விளக்கி விட்டன. ஆளுநர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் ஒப்புதல் மட்டும் கிடைத்தபாடில்லை. எல்லா மாநிலங்களிலும் இத்தகைய நிலை இருக்கிறது.

ஆட்டுக்கு தாடி எதற்கு?

ஆட்டுக்கு தாடி எதற்கு என்று அண்ணா சொன்னதை இங்கு நினைவுகூர்கிறேன். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? ஆளுநரின் சிக்கலான செயல்பாடுகளால் மாநில அரசின் நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. அத்தகைய பதவியே தேவையில்லை'' என்று திமுக செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.