கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

23 January 2022

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் பொள்ளாச்சியில் இருந்து நடுப்புணி செல்லும் சாலையில் செந்தாம்பாளையம் பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சரக்கு வாகனத்தில் 50 கிலோ எடைகொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த டிரைவர் ராஜா மன்சூர் அலி (வயது 38), மணிகண்டன் (35), சக்திவேல் (36) என்பதும், ரேஷன் அரிசையை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி