முதலாம் உலகப் போரில் ஏறத்தாழ 1.5 மில்லியன் இந்திய படை வீரர்கள் போரில் பங்கேற்றனர். அதில் 74,000 பேர் மரணித்தனர்.
அனைத்து போர்களையும் முடிவுக்கட்ட வந்த போர் என்று வர்ணிக்கப்பட்ட முதலாம் உலகப் போர் முடிவுக்குவந்து இன்று ஒரு நூற்றாண்டாகிறது.
ஒரு நூற்றாண்டானப் பின்னும், அந்த போர் குறித்து சொல்லப்படாத கதைகள் ஏராளமாக உள்ளன.
வரலாற்றாசிரியர் ஜார்ஜ் மோர்டான் அந்தப் போர் குறித்த, அந்த போரில் சேவை செய்த ஐந்து பேர் குறித்த கதைகளை இங்கே பகிர்கிறார்.
அர்சலா கானின் 57ஆவது வைல்ட் ரைஃபில்தான் முதல்முதலாக முதலாம் உலகப் போரில் நேரடியாக பங்கேற்றது.
அக்டோபர் 22, 1914ஆம் ஆண்டு பெல்ஜியத்திற்குள் நுழைந்த படைக்கு கான் தான் தலைமை வகித்தார்.
1918ஆம் ஆண்டு வரை ஃபிரான்ஸ், எகிப்த், ஜெர்மன் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் பணியாற்றினார். பின் 1919ஆம் ஆண்டு லண்டனில் நடந்த வெற்றி பேரணியில் அவர் தனது படையணியின் சார்பாக கலந்துக் கொண்டார்.
பிரிட்டனில் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலாம் உலகப் போரில் காத்திரமான பங்கை வகித்தனர். ஏன் வின்ஸ்டன் சர்ச்சில் கூட சிறந்த எழுத்தாளர்தான். இந்திய பின்னணியில் அவ்வாறான ஒருவரை குறிப்பிட வேண்டுமென்றால் அமர் சிங்கை குறிப்பிட வேண்டும்.
1890 - 1940 இடையிலான காலக்கட்டத்தில் அவர் எழுதிய 89 தொகுதிகள் முதலாம் உலகப் போரின் நிலவரத்தை நன்கு விவரிக்கிறது.
அவரது ஐந்து குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிட்டன, ஆறாவது மகள் ராஜஸ்தானில் அவரது வீட்டில் பிறந்தாள். அந்த குழந்தைக்கு ரடன் என பெயரிடப்பட்டது. போர் முடிந்து வந்த அவருக்கு புதிய நம்பிக்கையை வழங்கியது ரடன்தான்.
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது கஸ்தூர்பா காந்தி தனது கணவர் மகாத்மா காந்தியுடன் இங்கிலாந்தில் இருந்தார்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றினார்.
இங்கிலாந்து வடக்கு கடற்பகுதியில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமில் காயமடைந்த 16 ஆயிரம் வீரர்களுக்காக அமைக்கப்பட்ட இந்திய ராணுவ மருத்துவமனையில் அவர் தன்னார்வலராக பணியாற்றினார்.
அவல் நுர்
1914-1918 வரை மிகவும் பிரபலமான இந்திய ராணுவ அணுவகுப்பில் இடம் பெற்றிருந்தார்.
1914 முதல் 1917 வரை பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் பணிபுரிந்தார். அப்போது மூன்று முறை காயமடைந்தார்.
1918ஆம் ஆண்டு தொடக்கத்தில் சோவியத் மத்திய ஆசியாவுக்கு ரகசிய இந்திய ராணுவ பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 இந்திய வீரர்களில் இவரும் ஒருவர்.
லண்டனில் இருந்து வந்த நேரடி ஆணைப்படி, ஜெர்மனிக்கு ரயில் அல்லது கடல் வழியாக மத்திய ஆசியாவில் இருந்து சோவியத் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்பதே இவர்களது பணி.
இதற்காக ரகசிய முகவரான நுர், இமயமலை ஊடாக யாக்கில் (காட்டு எருது) பயணம் செய்தார். அதற்கு முன்னதாக எதிரிகளின் திட்டங்களை தகர்த்தெறியவும், அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவும் மற்ற அதிகாரிகளுடன் அயராமல் உழைத்தார் நுர்.
மிர் தஸ்த்
ஜெர்மனிய ரகசிய முகவரான மிர் மஸ்தில் மூத்த சகோதர்ரே மிர் தஸ்த். அவரது அண்ணன் போலவே இவரும் ராணுவத்தில் இருந்து தப்பியோடினார்.
1914ஆம் ஆண்டு அவரது அண்ணன் சென்ற நான்கு மாதங்களிலேயே கடல் வழியாக பிரான்சுக்கு சென்றார். அங்கு ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. மேற்கத்திய முன்னனியில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பிரிவுகளில், பணி புரிந்ததால் இவர்கள் பார்த்துக் கொண்டதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
பெல்ஜியத்தில் உள்ள ஈப்ராவில் ரசாயண தாக்குதலின் போது நன்கு செயல்பட்டதற்காக 1915 ஏப்ரல் மாதம், பிரிட்டனின் விக்டோரியா க்ராஸ் விருதை மிர் தஸ்த் வென்றார். இந்திய படையினரை தாக்கும் வகையில், குழிகளுக்கு சிலிண்டர்கள் வைத்து அதன் மூலமாக விஷம் நிறைந்த க்ளோரின் வாயுவை ஜெர்மனியர்கள் வெளியிட்டனர்.
"நான் அந்த வாயுவை எட்டிலிருந்து பத்து வினாடிகள் முகர்ந்திருப்பேன். என் கண்களிலும் மூக்கிலும் நீர் வந்தது" என மிர் தஸ்த் குறிப்பிட்டார்.
எனினும், அவர் அங்கு போராடி காயமடைந்த தோழர்களை மீட்டெடுத்து வந்தார்.
1915ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் இருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு முன் ஐந்தாம் அரசர் ஜார்ஜால் மிர் தஸ்தின் மார்பில் பதக்கம் குத்தப்பட்டது.
போர் மற்றும் ரசாயன தாக்குதலால் ஏற்பட்ட காயங்களில் இருந்து குணமடைய, 1916ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு திரும்பினார் தஸ்த். 1917ஆம் ஆண்டு ராணுவ பணிக்கு திரும்பியபோது, இந்திய ஊடகங்களால் கதாநாயகன் போல கொண்டாடப்பட்டார்.
எனினும், பிரிட்டிஷ் வேலையை விட முடிவு செய்த தஸ்த், அவரது சகோதரர் போல ஓடினார்.