முதல் உலகப்போரின் அடிநாதம்(1914-1918)

உலக வரலாற்றில் பல போர்கள்  நடந்திருக்கின்றன…போர்களின் முக்கிய நோக்கம் ஆட்சியை ஒரு நாட்டை பிடித்து தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவது.

மனிதன் தன் நாகரீகத்தை தொட்ட காலத்தில் வில்-அம்பு, வேல், வாள், ஈட்டி முதலிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு, நவீன காலத்தில் துப்பாகிகள், பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும், டாங்கிகளும் பயன்படுத்தப்பட்டது 1914-1918 வரை நடந்த முதல் உலகப்போரில் தான்.

போருக்கு காரணம்

ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாந்தும், அவருடைய மனைவியும் காரில் சென்றபோது(1914 ஜூன் 28-ம் தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன் செர்பிய நாட்டை சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914-ம் ஆண்டு முதல் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி  செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது.

கப்பல்கள் கடலில்மூழ்கின. இதன் காரணமாக ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது. இரு தரப்பினருக்கும் இடியே தரையிலும் கடலிலும் பயங்கர போர்கள் நடந்தன.

நீர்மூழ்கி கப்பல்களையும், போர்விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உருவாக்கியது.

ரஷியா விலகல் 

போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில் புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யுனிச அரசு உதயமாகியது.லெனின் அரசு, 1917-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு போரிலிருந்து விலகிக் கொண்டது.

இந்தப் போரில் ஜெர்மனி படைகள் விஷ வாயுவைப் பயன்படுத்தின.

போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள், அவர்களுக்கு பின்னால் வரும் குதிரை வண்டிகளில், விஷப்புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும், எதிரிப் படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும்.

அவற்றிலிருந்து வரும் விஷவாயு எதிரிகளை தாக்கும். போரில் விஷவாயுவை பயன்படுத்தக் கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புகொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷவாயுவை பயபடுத்தியது.

ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன. இதனால், ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தைக் கெய்சர் ஏவினார். உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி சொந்த மக்களை சுட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

ஜெர்மனி சரண்

நேச நாடுகளின் படைகள் ஜெர்மனிக்குள் 1918-ம் ஆண்டு நுழைந்தன. இந்த பெரும் படைகளின் தாக்குதல்களை ஜெர்மனியால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஜெர்மனி சரணடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை பிரதிநிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

சேதங்கள் 

1561 நாட்கள் நடைப்பெற்ற இந்தப் போரில் 2 கோடிப் பேர் மாண்டனர். யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் இறந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன.

நஷ்டஈடு

போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919-ம் ஆண்டு ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது. போரில் பங்கு கொண்டு நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகளை பிரான்ஸ் எடுத்துக் கொண்டது.

நாடுகள் சிதறின

ஆஸ்திரிய நாடு பல்வேறு இன மக்களை கொண்ட நாடாகும். போருக்கு பிறகு ஆஸ்திரிய நாடு துண்டு துண்டானது. யுகோஸ்லாவியா, போலாந்து, செக்கசலோ-வக்கியா ஆகிய நாடுகள் தோன்றின. மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக் கூடாது உலகநாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்” ஒன்று நிறுவப்பட்டது. ஆனால், இந்த சங்கத்தை நிறுவ பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா சேரவில்லை.

உயிர்சேதங்கள் 

ஜெர்மனி-17,70,000,

ரஷியா-17,00,000,

பிரான்ஸ்-13,60,000,

ஆஸ்திரியா-12,00,000,

பிரிட்டன்-9,10,000,

இத்தாலி-6,50,000,

ருமேனியா-4,50,000,

துருக்கி-3,30,000,

பல்கேரியா-2,40,000,

செர்பியா-1,90,000,

பெல்ஜியம்-60,000,

அமெரிக்கா-50,000,

போர்ச்சுகல்-13,000…