காவும், காப்புக்காடுகளும் – வே.இராஜகுரு

மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவற்றை வெட்டி அதில் தேக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். மாதம் மும்மாரி மழை பொழிய ஊர் தோறும் கோவில்களையும், அவற்றைச் சுற்றி காடுகளையும், உருவாக்கி வைத்தனர். இதனால் அவர்களால் முப்போகம் விவசாயம் செய்ய முடிந்தது. கோவில்களும்,வழிபாடுகளும், காடுகளும்,நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருந்தன.

மருத்துவக் குணமுள்ள பல மூலிகைத் தாவரங்களைப் பெருக்கவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்காலக் கோவில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர்.இத்தகைய காடுகள் காப்புக்காடுகள் எனப்படுகின்றன. 


அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள்,பின்  மண்தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோவில்களாகவும்,கற்றளிகளாகவும் காலத்துக்கு ஏற்ப உருமாற்றம் பெற்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையைப் பாதுகாக்கும் சூழியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல்,மருத்துவ மூலிகைகள் தருதல்,பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன. இக்கோவில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாகக் கருதுவதால்,அவற்றை கோவில் பணிகளுக்காக கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோவிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையைப் பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகள் ஆகும்.

ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோவில்கள்,மரங்கள் சூழ்ந்த காப்புக் காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோவில்களில் நந்தவனம் என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பெருங்கோவில்களில் தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது.

கேரளாவில் பல சாஸ்தா மற்றும் காளி கோவில்கள் காப்புக் காடுகளால் உருவாகியுள்ளன.இத்தகைய கோவில்கள் காவு எனப்படுகின்றன. கா, காவு என்ற சொல்லுக்கு சோலை என்பது பொருள். காவுக்கோவில் அமைந்த பகுதிகளில் உருவான ஊர்களும் கோவில் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.இப்போதும் அங்கு பழமை மாறாமல் இக்காடுகளும்,அவற்றின் மூலிகைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோவில்கள்,முக்கியமாக ஐயனார், காளி கோவில்கள், உகாய், ஆதண்டை,ஆத்தி, தாழை, நாட்டுவீழி,சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகைத் தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோவில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோவில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோவில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோவிலைச் சுற்றி காவல் நிற்கின்றன. இலங்கை கதிர்காமம் முருகன் கோவில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் உள்ளதாக இலங்கை வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோவில்களில் காணமுடிகிறது.இத்தகைய காப்புக்காடுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு புதிய மரங்கள் வளர்த்து பாதுகாக்கப்படவேண்டும். 

வே.இராஜகுரு
தலைவர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.